Sunday, April 14, 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024 : தமிழ்நாடு (கருத்தும் கணிப்பும்) - பகுதி 2

 வணக்கம் !!

ஒவ்வொரு கூட்டணிக்கான பலம் பலவீனங்களை பார்த்துவிட்டு இறுதியாக கருத்துக்கணிப்பின் முடிவுகளை பார்க்கலாம். 


இந்தியா கூட்டணி 

பலம் 

* இந்தியா கூட்டணி என்ற பெயரில் பாஜகவை எதிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கூட்டணி கடந்த இரண்டு தேர்தல்களை விடவும் பாஜகவிற்கு கடும் போட்டியாக அமைவதால் பலம்.

* தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்தது. 

* கடந்த முறை அமைத்த அதே கூட்டணியை தொடர்வது.

* திமுகவிற்கான கட்டமைப்பு பலம், ஆட்சி பலம்.

* ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என அதிகார மையங்களின் கீழ் கட்சியை வழிநடத்தி செல்வது, பிரச்சார திட்டமிடல்.

* தொகுதிகளில் அமைச்சராக உள்ள (அ) முக்கிய தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடுவதால் அந்த தொகுதியை மட்டும் குறி வைத்து வேலை செய்யும் தலைவர்கள். 

* பத்தாண்டுகால ஆட்சிக்கு இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யும் பொருட்டு திமுக மத்திய அரசை கடுமையாக எதிர்ப்பது.

* பாஜக எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி கமலின் மக்கள் நீதி மையம் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது.

* வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து அளித்திருப்பது. 

* அச்சு ஊடக, காட்சி ஊடக, இணைய ஊடகத்தில் விளம்பரம் செய்வதில் முன்னிலை பெறுவது.   

* பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட சில திட்டங்களை முன்னிலைப்படுத்தி ஓட்டு கேட்பது.

*சென்னையை உள்ளடக்கிய மத்திய மண்டலம்  வழக்கம்போலவும், கூடவே தென் மண்டலமும் திமுகவிற்கு ஆதரவாக இருப்பது. 

பலவீனம் 

* வாரிசு அரசியல், ஊழல் கட்சி என திமுக மீது வைக்கப்படும் விமர்சனம்.

* கடந்த முறை வெற்றி பெற்ற எம்.பிக்களால் உபயோகம் இல்லாமல் போனது.

* பெரும்பாலான எம்.பிக்கள் தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தது. 

* எப்படி இருந்தாலும் மத்தியில் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என நம்பப்படுவதால் பாதகமாக அமைவது.

* பெண்களுக்கான திட்டங்கள் பல அனைவரிடத்திலும் சென்று சேராமல் இருப்பது.

* போன முறை ஆட்சிக்கு வருவதற்கு திமுக கையிலெடுத்த "நீட் ரகசியம்" ,"எய்ம்ஸ் மருத்துவமனை" இம்முறை அவர்களுக்கு எதிராக திரும்பியிருப்பது. 

* சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகள். (திருச்சியில் மதிமுகவின் துரை வைகோவிற்கும் திமுகவிற்கும் & நாமக்கல்லில் எதிர்ப்பு காரணமாக வேட்பாளரை மாற்றிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)

*கடந்த முறை கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் பல நிறைவேற்றப்படாமல் இருப்பது.

அதிமுக கூட்டணி 

பலம் 

* கட்சி ரீதியான கட்டமைப்பு பலம். 

* அதிமுகவை கபளீகரம் செய்யும் முனைப்பில் இருந்த பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கியது. 

* பாஜக பிரிவுக்கு பின் தலைமையின் தொடர் பிரச்சாரத்தால் தொண்டர்கள் உற்சாகமடைந்திருப்பது.

* கூட்டணியில் உள்ள தேமுதிக விஜய்காந்த் மறைவிற்கு பின் எழுச்சியுடன் களம் காண்பது.

* கூட்டணியில் பாஜக இல்லாததால் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவது.

* 2019 இல் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளால் சிதறிப்போன வாக்குகள் மீண்டும் வர ஆரம்பித்திருப்பது.

* முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக செயல்பட்டு விளம்பரத்தில் முந்துவது

* புள்ளி விவரத்துடனும், திமுகவுக்கு ஆதாரத்துடன் காணொளி வாயிலாக தக்க பதிலடியும் கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருவதால், இது ரொம்ப புதுசா இருக்கே என்ற வகையில் அதிமுகவின் தலைமை எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேடை பிரச்சாரத்தில் முன்பை விட முன்னேறி வருவது.   

* ஆதரவுக்கரம் நீட்டும் கொங்கு மண்டலம். 

பலவீனம் 

* நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லாதது 

* பாமக, தமாகா உட்பட சில கட்சிகளை கூட்டணிக்கும் வைக்கமுடியாமல் போனது 

* தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகள் தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என பிரிந்து செல்வது 

* முக்கிய தலைவர்கள் யாரும் இத்தேர்தலில் போட்டியிடாதது. 

* வடக்கு மண்டலத்தில் பாமக பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவிற்கு ஏற்படும் வாக்கு இழப்பு. 

* சட்ட சிக்கலை தாண்டி, கட்சி பிளவுகளை தாண்டி, அதிமுகவிற்கு நிலையான ஒரு தலைமையாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் உருவாவதற்கு எடுத்துக்கொள்ளப்படக்கூடிய காலம்.

தேசிய ஜனநாயக கூட்டணி 

பலம் 

* மோடியின் முகமும் அண்ணாமலையின் பரப்புரையும் 

* திமுகவிற்கு எதிரி நாங்கள்தான் என முன்னிறுத்துவது 

* அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என சொல்ல தொடங்கி இருப்பது (திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் தங்கள் வசம் வர)

* இறுதியாக அதிமுக, திமுக இல்லாமல் கூட்டணியை உருவாக்கி இருப்பது 

* தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடியின் தொடர் விஜயம்.

* பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் களத்தில் இருப்பது 

* இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சில தொகுதிகளை குறி வைத்து வேலை செய்வது (நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை உட்பட )

* ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பலமும், இந்துத்துவா அடிப்படையில் திரளும் வாக்குகளும். 

பலவீனம் 

* தமிழ்நாடு முழுவதும் பரவலாக வாக்கு கொண்ட கட்சிகளாக கூட்டணிக்கட்சிகள் இல்லாதது (தென் தமிழகத்தில் அமமுக, வட தமிழகத்தில் பாமக, கொங்கு பகுதியில் பாஜக, அதே போல் மற்ற கூட்டணி கட்சிகளும் ) 

* கூட்டணியில் இருக்கும் அணிகளின் வாக்குகள் அனைத்தும் ஒரு தொகுதியில் ஒருசேர திரள்வதற்கான வாய்ப்பில்லாதது. 

* பாமக வாக்குகள் இம்முறை முழுவதுமாக கூட்டணி கட்சிகளுக்கு பரிமாற்றம் அடையாமல்  இன்னும் சொல்லப்போனால் பாமாவிற்கே கிடைக்குமா என தொக்கி நிற்கும் கேள்வி ?

நாம் தமிழர் 

பலம் 

* சீமான் பேச்சும் பிரச்சாரமும் 

* கடைக்கோடி, பாமர மக்களின் ஆதரவு 

* கணிசமான முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு 

* சமூக வலைதள ஆதரவும் பிரச்சாரமும் 

* எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே களம் காண்பது.

* மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக கருதப்படுவது 

* தேர்தலுக்கு தேர்தல் பெருகி வரும் ஆதரவு 

* மக்கள் நீதி மையம் போட்டியிடாததால் அங்கிருந்து பெறப்போகும் வாக்குகள் 

* ஆண்ட கட்சிகளின் மீதான வெறுப்பை அறுவடை செய்யும் கட்சியாக இருப்பது 

பலவீனம் 

* வேட்பாளர் தேர்வு பல இடங்களில் சரியாக அமையாதது 

* இரண்டாம் கட்ட தலைவர்களோ, தொகுதியில் வலிமை பெற்ற தலைவர்களாகவோ யாரும் உருவாகாமல் இருப்பது. 

* கரும்பு விவசாயி சின்னத்தை பெற முடியாமல் போனது 

* சீமான் பேச்சை மட்டும் நம்பி இருப்பது 

* சில இடங்களில் கோபமாகி தன் நிலையிலிருந்து தவறி நடந்துகொள்ளும் கட்சித்தலைமை 

தொகுதிகளும் போட்டியிடும் வேட்பாளர்களும் 

39 தொகுதிகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டில் 32 தொகுதிகள் பொதுத்தொகுதியாகவும் 7 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் போட்டியிடுவதற்கான தனித்தொகுதிகளாகவும் உள்ளன. தென்காசி, நாகப்பட்டினம், சிதம்பரம், நீலகிரி, விழுப்புரம், காஞ்சிபுரம்,  
திருவள்ளூர் ஆகியன தனித்தொகுதிகள் ஆகும். 


நான்குமுனை போட்டியில் யாருக்கு வெற்றி 

இத்தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சியிம்   வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாலும் ஒரு கட்சிக்கு ஆதரவான அலையோ எதிரான அலையோ இல்லாததாலும் போட்டி கடுமையாகவே  உள்ளது. நாம் தமிழர் கட்சி கடும் போட்டியை கொடுத்தாலும் வெற்றி பெற கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லாததால் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை மையப்படுத்தியே கணிப்பையும் செய்ய முடிகிறது. ஆளும் திமுகவை பொறுத்தவரை பெரிய புள்ளிகள் களத்தில் இருப்பதால் அவர்கள் நிற்கக்கூடிய தொகுதியில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாலும் பணம் செலவழிக்க முடியாத நிலையிலும் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது வெற்றி பெறுவதற்கு. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கடும் உழைப்பை கொடுத்தாலும் கொங்கு மண்டல பகுதிகளிலும் சில தனித்தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கே அவர்களுக்கு வாய்ப்புள்ளது. மற்ற தொகுதிகளில் நெருக்கடியை தரலாம். பாஜக கூட்டணியை பொறுத்தவரையில் கட்சிக்கான அடையாளத்தை தாண்டி தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கை கொண்டவர்களுக்கே வெற்றி கிட்டலாம். அந்த வகையில் கோவை(அண்ணாமலை ), தருமபுரி(சௌமியா), தேனி(தினகரன்) பாஜகவிற்கு சாதகமாக இருக்கலாம். இது தவிர எல்.முருகன், வினோஜ் பி.செல்வம், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தராஜன், ஏ.சி.சண்முகம், பச்சமுத்து ஆகியோர் மதிப்புக்குரிய வாக்குகள் வாங்கலாம்.

இழுபறியாகும் தொகுதிகள் 

நம் கணிப்பின்படி, 14 தொகுதிகளை தவிர மீதி உள்ள தொகுதிகளில் இழுபறி இருப்பதாகவே தெரிகிறது.  சில தொகுதிகளில் இருமுனை போட்டியாகவும் சில தொகுதிகளில் மும்முனை போட்டியாகவும் வேறு வேறு கட்சிகளுக்கு இடையிலும் அமைகிறது. அதன்படி 

8 தொகுதிகளில் திமுக(கூ) - அதிமுக(கூ) - பாஜக(கூ) 
திருநெல்வேலி, கடலூர், இராமநாதபுரம், தேனி, தென் சென்னை, வேலூர், நீலகிரி (தனி), பெரம்பலூர் உட்பட 8 தொகுதிகளில் மூன்று கூட்டணிக்கு இடையிலும் போட்டி நிலவுகிறது.  

14 தொகுதிகளில் திமுக(கூ) -அதிமுக(கூ)
கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நாமக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, ஆரணி, திருச்சிராப்பள்ளி, சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), தருமபுரி, திண்டுக்கல் உட்பட 14 தொகுதிகளில் திமுகவுடன் மல்லுக்கட்டுகிறது அதிமுக. 

2 தொகுதிகளில் பாஜக(கூ) - அதிமுக(கூ)
கோயம்புத்தூர், தென்காசி (தனி) - இங்கு போட்டியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுகிறது திமுக.

1 தொகுதியில் பாஜக(கூ) - திமுக(கூ)
கன்னியாகுமரியில் போட்டி காங்கிரசுக்கும் பாஜவிற்கும்தான். மூன்றாவதே அதிமுக. 

கருத்துக்கணிப்பு முடிவு 

நான் இதுவரை தந்த தரவுகள் அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் பின்வருமாறு அமைகிறது என் கருத்துக்கணிப்பு. 



அதாவது ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் முழு மூச்சுடன் வேலை செய்யும் பட்சத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 28 திமுகவிற்கும், 9 அதிமுகவிற்கும், 2 பாஜகவிற்கும் செல்லலாம். ஆனால் நாம் இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதிமுக எந்த தேசிய கட்சியுடனும் இணைந்து போட்டியிட வில்லை என்பதாலும் பாஜகவிற்கு போன முறையை விட இம்முறை வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்பதாலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை பொறுத்து அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சில இழுபறி தொகுதிகளில் பறிபோகலாம். அதாவது 9-ல் இருந்து குறையலாம். அப்படி குறையும்போது அந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு திமுக கூட்டணிக்கு போகலாம். அதாவது 28-ல் இருந்து அதிகரிக்கலாம். எவ்வளவு குறைகிறது அல்லது அதிகரிக்கிறது என்பதை ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுதான் சொல்ல முடியும். 

இத்தேர்தலை பொறுத்தவரை, இன்றைய சூழ்நிலையில்,  ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றி எது ? மாபெரும் வெற்றி எது ?

திமுக(கூ) - நான் மேலே குறிப்பிட்ட 28-ஐ பெற்றால் வெற்றி. 35-க்கு மேல் பெற்றால் மாபெரும் வெற்றி. 

அதிமுக(கூ) - அனைத்து தொகுதிகளிலும் கடும் நெருக்கடி அளித்து 2-ஐ பெற்றாலே வெற்றிதான். 9-ஐயும் பெற்றால் மாபெரும் வெற்றி. 2026 சட்டமன்ற வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். 

பாஜக(கூ) - இம்முறை வாக்கு சதவிகிதம் 8 - 12 சதவிகிதத்தை தொட்டால் வெற்றி. 2 தொகுதிகளில் வெற்றியோ (எ) வாக்கு சதவிகிதம் 15-ஐ தொட்டாலோ மாபெரும் வெற்றி. 

நாம் தமிழர் - போன முறை வாங்கியதை விட அதிகம் பெற்றால் வெற்றி. ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றிக்கு அருகாமையில் வந்தால் மாபெரும் வெற்றி. 
 

நான் சொல்ல விரும்புவது 

சுய அறிவுக்குட்பட்டு சிந்தித்து அனைவரது நலன் காக்கும் பொருட்டு அறத்தின் அடிப்படையில்தான்  வாக்களிக்கின்றீர்களா என உறுதி செய்து கொண்டு வாக்களியுங்கள். நோட்டாவை தவிருங்கள். 

ஏப்ரல் 19 - மறவாமல் வாக்களிப்போம் 
ஒற்றை விரலால் அறம் காப்போம். 

நன்றி வணக்கம் ! உங்களது மேலான கருத்துக்களை கீழே பதிவிடுங்கள். 

அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ? கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல்  அரசியல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment