Sunday, April 14, 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024 : இந்தியா & தமிழ்நாடு (கடந்த கால வரலாறு)

வணக்கம்.

எந்திரமயமாக்கப்பட்ட இன்றைய வாழ்க்கை முறையில் நம்மை பற்றி கூட சிந்திக்க நேரம் இல்லாமல் அனைவரும் பணத்தை நோக்கியும் அதன் பிறகு சம்பாதித்த பணத்தை செலவழிக்க மருத்துவமனையை நோக்கியும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கையில் நம் முன்னோர்களை பற்றியோ, நம் மொழியை பற்றியோ, நம் கலாச்சாரம், பண்பாடு பற்றியோ, ஒரு மாநிலமோ தேசமோ அல்லது நாம் வாழும் பகுதியோ ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு வளர்ச்சி பெற்றது/எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பதை பற்றியோ நாம் அறிய முற்படுகிறோமா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதுதான் நமக்கு கிடைக்ககூடிய சத்தமான பதில். 

பழைய வரலாறுகளை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், இது நேர விரையமல்லவா என நீங்கள் மனதிற்குள் ஒருவேளை நினைத்தால், அதற்கும் பதில் தர விரும்புகிறேன். நிகழ்காலமோ எதிர்காலமோ அது கடந்த காலத்தின் தொடர்ச்சிதான் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். எவர் ஒருவர் கடந்த காலத்தினை தெளிவாக மனதில் நிலைநிறுத்தி நினைவுகூர்ந்து ஆராய்ந்து அதிலிருந்து படிப்பினையை பெறுகிறாரோ அவர் ஒருவரால் மட்டுமே நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி மற்றவர்களை காட்டிலும் உச்சபட்ச ஆளுமையை சரியான பாதையில் செலுத்த முடியும். 

இது அரசியலுக்கும் பொருந்தும். அரசியலை பற்றியே தெரியாத பல பேர் அரசியல் வரலாற்றை பற்றி தெரிந்திருக்க கண்டிப்பாக வாய்ப்பில்லை. போன பதிவில் அரசியலை பற்றி தெரிந்து கொண்ட நீங்கள், இப்பதிவில் ஒவ்வொரு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போதும் முக்கியமாக தமிழ்நாட்டில் அரசியல் எவ்வாறு இருந்துள்ளது எப்படி மாற்றம் பெற்றுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேற்கொண்டு வாசியுங்கள். 


17 முறை

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை 17 முறை நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. (1951 முதல் 2019 வரை). இதில் கிட்டத்தட்ட முதல் 8 தேர்தல்களிலும் போட்டியே இல்லாமல் அரசியல் களமாடியது காங்கிரஸ் கட்சி. அடுத்த நடந்த 7 பொதுத்தேர்தலில் காங்கிரசும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்தன கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன். கடைசி 2 பொதுத்தேர்தலில் (2014, 2019) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது பாஜக. இப்பொழுது 2024-ஆம் ஆண்டு நடக்க கூடியது 18ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தல். 

ஆரம்பத்தில் கோலோச்சிய காங்கிரஸ் (1951 to 1984)

கற்றவர்களுக்கு அரசியல் பொறுப்பை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பின்னாளில் சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டது. காங்கிரஸ் கட்சியில், தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கி இருந்தது. இக்கால கட்டத்தில்தான் நம் அனைவராலும் அறியப்படுகிற இந்திய தேசத்தின் தந்தை என்று போற்றப்படுகின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து தாயகம் திரும்பி காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயருக்கு எதிராக நிறவெறி இனப்பாகுபாட்டுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்திய மக்களிடத்தில் நன்கு அறியப்பட்ட காந்தியால் சுதந்திர போராட்டத்தின் வீரியத்தை அதிகரித்து நாடு முழுவதும் மூலை  முடுக்குகளில் எல்லாம் சுதந்திர உணர்வை எழுச்சியை உண்டாக்க முடிந்தது. போராட்டத்தில் வெற்றியும் பெற்று சுதந்திரம் கிடைத்தது வரலாறு. இவ்வாறான வரலாற்றை கொண்ட காங்கிரஸ் கட்சியால் முதல் 8 தேர்தல்களில் போட்டியே இல்லாமல் வெற்றி பெற முடிந்தது என்றால் அது புரிந்து கொள்ள கூடியதுதான். பொதுவுடமை தத்துவத்தை பின்பற்றி 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தி இரண்டாம் இடத்தை பிடித்தனர். 

விதிவிலக்கான 6ஆவது தேர்தல் (1977) - இந்திராவின் நெருக்கடி நிலை 

சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் (1951) வாகை சூடிய காங்கிரஸில் இருந்து முதல் பிரதமரானார் ஜவகர்லால் நேரு. சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே இந்தியா விடுதலை பெற்ற பின் நேருவே பிரதமராக பொறுப்பில் வீற்றிருந்தார்(1947-1952). கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த நேருவின் மறைவிற்கு (1964) பின் அவரது இடத்திற்கு வந்து பிரதமராகவும்(1967) பதவியேற்றார் நேருவின் மகள் இந்திராகாந்தி.  அதன் பின்னர் ஆளுநர் நியமனத்தில் வந்த பிரச்சனையில் கட்சிக்குள்ளேயே  இந்திராவிற்கு அதிருப்தி ஏற்பட்ட சமயத்தில் துணிச்சலாக முடிவெடுப்பதற்கு பெயர் போன இந்திராகாந்தி கட்சியிலிருந்து மூத்த தலைவர்களை ஓரம்கட்டினார். இது இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாக பிளவுபட (இந்திரா காங்கிரஸ்-இந்திரா, நிறுவன காங்கிரஸ்-காமராஜர்) வழிவகுத்தது. வலுவாக இருந்த இந்திரா காங்கிரஸ் 1971-ஆம் ஆண்டு பெரும் வெற்றியை பெற்றது.  அரசாங்க அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொண்ட தவறான முறைகேடு செயல்களால், ஜூன் 12, 1975-ல் அலகாபாத் நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்திரா காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டில் (ஜூன் 24,1975), அவர் பிரதமராக தொடர அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளே, இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு குடியரசு தலைவரால் பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திரா காந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குவதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது. இதனால் செல்வாக்கிழந்த இந்திரா 1977-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தார். 1977 பொதுத் தேர்தலில் நிறுவன காங்கிரசு, பாரதிய ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வென்று காங்கிரசில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமரானார். 1980-ஆம் ஆண்டு எதிர்கட்சியான ஜனதா கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது. பின்பு 1980-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதமரானார். மீண்டும் ஒரு தடாலடி முடிவெடுத்து பிரச்சனை ஏற்பட்ட பொழுது ஒட்டுமொத்த பஞ்சாப் சீக்கியர்களின் கோபம் பிரதமர் இந்திரா காந்தி நோக்கி இருந்ததால், அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் இந்திரா காந்தி 1984-ல் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு நடந்த பொதுத்தேர்தலில் அரசியலால் பெரிதும் ஆர்வம் இல்லாமல் இருந்த, 1981-ஆம் ஆண்டே அரசியலுக்குள் வந்த இந்திரா காந்தியின் மகனான ராஜிவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்றார். 

காங்கிரசுக்கு நிகரான பாரதிய ஜனதா கட்சி (1989 to 2009)

ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவாக 1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் 1977-ஆம் ஆண்டு எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கி காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு பிரதமரை கொண்டுவர உதவியது. அதன்பிறகு ஜனதா கட்சி கலைக்கப்பட்டு 1980-ல் உதயமானது பாரதீய ஜனதா கட்சி.  1989-ல் தற்கொலைப்படை தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட ராஜிவ் காந்தியின் மறைவுக்குப்பின் 1989-ல் மூன்றாவது இடத்தை பிடித்த  பிடித்த பாரதிய ஜனதா கட்சி 1991-ல் இரண்டாவது இடத்தை பிடித்து காங்கிரஸ் கட்சிக்கு நிகரான கட்சியாக வளர தொடங்கியது. பாரதீய ஜனதா கட்சி மட்டுமல்ல இந்த காலகட்டத்தில் மாநில கட்சிகளும் மக்களிடத்தில் அங்கீகாரம் பெற ஆரம்பித்தன. இதனை தொடர்ந்து அடுத்த நடந்த ஐந்து பொதுத்தேர்தல்களிலும் தனிப்பெரும்பானமை கிடைக்கவில்லை என்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மூன்று முறை பாரதிய ஜனதா கட்சியும் (1996, 1998, 1999) இரண்டு முறை காங்கிரஸ் கட்சியும் (2004, 2009) ஆட்சிக்கு வந்தன. 

தனிப்பெரும்பான்மையுடன் பாஜக Vs வலுவிழந்த காங்கிரஸ் Vs ஆதிக்கம் செலுத்தும் மாநில கட்சிகள்

குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அசுர வளர்ச்சி கண்டது பாஜக. அதே சமயம் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி மற்றும் மகன் ராகுல் காந்தி அவர்களுக்கு கட்சிக்குள்ளேயே செல்வாக்கு குறைய தொடங்கியது. இதனை பயன்படுத்திக்கொண்ட மாநில கட்சிகள் தங்கள் சக்திக்கேற்ப தத்தமது மாநிலங்களில் கட்சியை வளர்க்க தொடங்கினர். காங்கிரஸ் Vs பாஜக என்றிருந்த நிலை மாறி பாஜக Vs மாநில கட்சிகள் என்ற நிலையில் நடந்ததுதான் 2014 மற்றும் 2019 பொதுத்தேர்தல். இதில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தனர் பாஜக. அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு இணையாக தொகுதிகள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்று 2014இல் அதிமுகவும் 2019இல் திமுகவும் மாற்றத்திற்கான சக்தியாக மாநில கட்சிகளும் இருக்கின்றோம் என பிரகடனப்படுத்தினர்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் எப்படி? 

மாநில கட்சியின் பரிணாமம்(1951 to 1971)

1951 - சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தது.  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. முன்னரே தேசிய அரசியலுக்கு சொன்னது போல், மாநிலத்திலும் போட்டியே இல்லாமல் காங்கிரஸ் முதலிலும், இரண்டாவது இடத்தில் கம்யூனிஸ்டும் இருந்தன. 

1957 - 1951-ஆம் ஆண்டு நிலையே இம்முறையும் தொடர்ந்தாலும் கூட, திமுக இரண்டு தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றது கவனிக்கப்பட வேண்டியது. மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் சென்னை மாகாணத்தில் அப்போவே வளர ஆரம்பித்தது மாநிலக்கட்சி திமுக. தேர்தல் அரசியலில் உடன்பாடு இல்லாத பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து 1949-ஆம் பேரறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் திமுக. சினிமா வசனங்களின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும், நடிகர்களின் மூலமாகவும் கட்சி வேகமாக வளர்ந்தது என்றால் மிகையல்ல.  

1962 - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக திமுக சந்தித்த இத்தேர்தலில் பிரதானமாக இரண்டாம் இடத்தில் இருந்த கம்யூனிஸ்டை தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வந்தது திமுக. 2-ல் இருந்து 7 இடங்களை பெற்றது திமுக. வழக்கபோல் காங்கிரஸ் முதலிடத்தில். 

1967 - திமுகவின் வளர்ச்சியை புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) மற்றும் இதர கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, வழக்கம்போல் காங்கிரஸ் தனியாக காலம் காண, இம்முறை 3 இடங்களுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது காங்கிரஸ். 

1971 - காங்கிரஸ் பிளவுபட்ட பிறகு நடந்த இத்தேர்தலில் இந்திராகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் காமராஜரின் எதிர்ப்பை சமாளிக்க இதுவரை தனித்து களம்கண்ட காங்கிரஸ் இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க, கர்மவீரர் காமராஜ் தலைமையிலான நிறுவன காங்கிரஸ் மற்றொரு கூட்டணி அமைத்தது. மிகப்பெரிய வெற்றி பெற்றது திமுக கூட்டணி . ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற்றார் காமராஜர். 

உதித்த அதிமுக & கட்சிகளை கட்டுக்குள் வைத்த காங்கிரஸ் (1977 to 1991)

அண்ணாவின் இதயக்கனியாக திமுகவின் வளர்ச்சிக்கு பக்கபலமாக கருணாநிதி முதல்வராக உறுதுணையாக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன்  கட்சியின் பொருளாளராக கணக்கு கேட்டதின் அடிப்படையில் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதின் விளைவாக 1972-ஆம் ஆண்டு உதயமானது அதிமுக. பின்னர் 1973-ல் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் திண்டுக்கல்லில் மிகப்பெரிய வெற்றியை பெற்று களத்தில் இனிமேல் நாங்களும்தான் என வந்தது அதிமுக.  

1977 - 1975 to 1977 வரை இருந்த நெருக்கடி நிலை பிரகடனத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சூழ்நிலை நிலவி மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தாலும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காரணம் வலுப்பெற்று கொண்டிருந்த அதிமுகவுடன் செய்து கொண்ட கூட்டணிதான். 

1980 - 1979-ல் நடந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவு தர எம்ஜிஆர் மறுத்ததால் இம்முறை திமுகவுடன் உடன்படிக்கை செய்து கொண்டார் இந்திராகாந்தி. மிகப்பெரிய வெற்றி பெற்றது திமுக கூட்டணி. 

1984, 1987, 1991 - உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்ஜிஆருக்கு இந்திராகாந்தி உதவியதால் மீண்டும் 1984-ல் இணைந்த கூட்டணி எம்ஜிஆரின் மறைவிற்கு பின்னரும் கூட 1996 தேர்தல் வரை தொடர்ந்தது. இத்தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இக்கூட்டணி 1984, 1987 மற்றும் 1991 இல் எதிர் கூட்டணிக்கு முறையே  2, 1 மற்றும் 0 தொகுதிகளை மட்டும் ஆறுதல் பரிசாக அளித்தனர். 

இக்காலகட்டத்தின் இறுதியில்தான்  பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி துளிர்விட தொடங்கியது. 


கூட்டணி கணக்கும் நிர்ணய சக்திகளாக மாறிய மாநில கட்சிகளும் (1996 to 2009)

தேசிய கட்சிகளுக்கு தலைவலியாக எப்படி திமுக மற்றும் அதிமுக மாறியதோ அதே போல் திமுக அதிமுகவிற்கு தலைவலியாக உதித்தன மற்றும் பல மாநில கட்சிகள். முன்னரே துளிர்விட ஆரம்பித்த பிஜேபி, பாமாகவுடன் இக்காலகட்டத்தில் போட்டிக்கு வந்தன பல கட்சிகள். அதிமுகவுடன் கூட்டணி வைக்க மேலிடம் நிர்ப்பந்தித்ததால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்து பிரிந்து திமுகவை ஆதரிக்கும் நோக்குடன்  தனது ஆதரவாளர்களுடன்  1996-ல் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார் ஜி.கே.மூப்பனார். 1982-ஆம் ஆண்டே தலித்துகளுக்கான இயக்கமாக தோற்றுவிக்கப்பட்டாலும் கூட திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாறி 1999-ல் தேர்தல் களத்திற்குள் நுழைந்தது. திமுகவின் போர்வாளாக இருந்த வைகோ கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால் அக்கட்சியிலிருந்து விலகி 1994-ல் மதிமுகவை தோற்றுவித்தார். இது தவிர சாதியத்தை வைத்து பல்வேறு கட்சிகள் தோன்றின. ஆக, கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன  அனைத்து கட்சிகளும்.

1996 - அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக மீதான அதிருப்தியும், அதனால் காங்கிரசுக்கு மாற்றாக தமிழ் மாநில காங்கிரஸ் பார்க்கப்பட்டதும் அதிமுக+காங்கிரஸ் கூட்டணி படுதோல்விக்கு காரணங்களாக அமைந்தன. தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணி அமைத்த திமுக எளிதாக வென்றது. இதுதவிர மதிமுக - சிபிஐ கூட்டணியும் பாமக தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட்டன. திமுகவை சார்ந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, ஜி.வெங்கட்ராமன்  - மத்திய அமைச்சர்கள்.     

1998 - திமுக + தாமாகா  + சிபிஐ கூட்டணியே 1996ஐ போல இம்முறையும் தொடர்ந்தாலும் கூட, கூட்டணியில் முந்திய அதிமுக இம்முறை வென்றது. அதிமுக கூட்டணியில் இருந்த பிஜேபி, பாமக , மதிமுக கணிசமான தொகுதிகளை வென்று முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கால்பதித்தனர். (அதிமுகவை சேர்ந்த மு.தம்பிதுரை மற்றும் சேடப்பட்டி முத்தையா மத்திய அமைச்சர்களானர்.) 

1999 - போன முறை தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்ததாலும், இம்முறையும் மத்தியில் ஆட்சிக்கு பாஜக வந்துவிடும் என்பதாலும்  அமைச்சரவையில் பங்குபெற என்ன செய்ய என யோசித்த திமுக, போன முறை வென்ற  அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை தன்வசமாக்கியது (பாஜக,பாமக, மதிமுக). பாஜக உள்ளே வந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் இம்முறை தனித்து கூட்டணி அமைத்து களம்  கண்டது. அதிமுக காங்கிரஸ் உடன் இணைந்தது. முடிவு திமுக - 26, அதிமுக -13, திமுகவை சார்ந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு - மத்திய அமைச்சர்கள்.     (முரசொலி மாறன் கருணாநிதியின் அக்கா மகன் ஆவார்).


தனித்து களம் கண்ட அதிமுக & தலைவர்களின் மறைவு

2004 - நான்குமுனை போட்டி நிலவிய இத்தேர்தலில் முக்கியமான மாநில கட்சிகளின் ஆதரவுடன் இம்முறை காங்கிரசுடன் கைகோர்த்தது திமுக. அதிமுக பாஜகவுடன் மட்டும்.  இதுதவிர இரண்டு சாதாரண கூட்டணிகள்(இதில் விசிக மட்டுமே சற்று பெரிய கட்சி). இப்போட்டியில்  மிகப்பெரிய வெற்றி பெற்றது காங்கிரஸ்+திமுக கூட்டணி. வெகு நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரதமர் பதவிக்கு வந்தார் மன்மோகன் சிங். திமுகவை சார்ந்த டி.ஆர்.பாலு, ஆண்டிமுத்து ராஜா, தயாநிதி மாறன் மற்றும் பாமகவை சார்ந்த அன்புமணி ராமதாஸ்  - மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.

2009 - மீண்டும் காங்கிரஸ் + திமுக கூட்டணி. போனமுறை தனித்து போட்டியிட்ட விசிக-வை கூட்டணிக்குள் இழுத்தது திமுக. அதனால் திமுகவை விட்டு வெளியேறியது பாமக. (பாமக வளர்கிறது. அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வேறு கொடுத்தாகி விட்டது. எனவே அவர்களை வெளியேற்ற வேண்டுமெனில் விசிகவை இழுத்துதானே ஆகவேண்டும்). ஆதலால் அதிமுகவில் ஐக்கியம் ஆகினர் பாமகவும் மதிமுகவும். தேமுதிக அரசியல் களத்திற்கு வந்து கணிசமான ஓட்டுக்களை வாங்கினர். முடிவு : திமுக - 27, அதிமுக - 12. திமுகவை சார்ந்த தயாநிதி மாறன், ஆண்டிமுத்து ராஜா, மு.க.அழகிரி  - மத்திய அமைச்சர்கள் ஆனார்கள். (மு.க.அழகிரி-கருணாநிதியின் மகன், தயாநிதி மாறன் - கருணாநிதியின் அக்கா பேரன்)

2014 - தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாநிலக்கட்சி முதன்முறையாக கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது என்ற  வரலாற்றை சொந்தமாகியது அதிமுக. 2004-ஆம் ஆண்டே பாஜகவை மட்டும் கூட்டணியில் சேர்த்து இதுபோன்றதொரு முயற்சியை மேற்கொண்ட அதிமுக இம்முறை நாடு முழுவதும் பாஜக ஆதரவு அலை வீசினாலும் தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்த்து தனித்தே களம் கண்டது "லேடியா மோடியா" என்ற முழக்கத்துடன். காங்கிரஸ் இல்லாமல் களம் கண்டது திமுக. மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் நல கூட்டணியில் பாஜகவும், தனித்தே காங்கிரசும் களம் கண்டன. 

2019 - திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம்பெற்றன. இச்சமயத்தில் கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி உயிரோடு இல்லை. ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் கட்சியிலும் ஆட்சியிலும் யார் பொறுப்புக்கு வருவது என்பதில் தொடங்கி ஏற்பட்ட பல சலசலப்புகளுக்கும் பிரச்சனைகளுக்கும்  பின்னர் இத்தேர்தல் நடந்ததாலும்  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி தேர்தலில் தனியே போட்டியிட்டதாலும் கள சூழல் அதிமுகவிற்கு எதிராகவே இருந்தது. திமுகவை பொறுத்தவரை கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் என அடையாளம் காட்டப்பட்டு விட்டதாலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்து கொண்டிருந்த அதிமுகவின் மீதான சலிப்பும் திமுக எளிதில் வெற்றிபெற வழிவகுத்தது. இது தவிர வாக்குகளை பிரிக்கும் சக்தியாக நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மையமும் முக்கிய பங்காற்றினர். 


2024 ?

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பலம் பலவீனங்கள் பற்றியும் வெற்றி பெற போகும் கட்சி/கூட்டணி எது என்பதற்கான கருத்துக்களையும் கணிப்புகளையும் அடுத்த பதிவில் காணலாம். 

இப்பதிவிற்கான உங்களது மேலான கருத்துக்களை கீழே பதிவிடவும்.

அரசியலுக்கு புதியவரா நீங்கள் ? அரசியல் அடிச்சுவடியை தெரிந்து கொள்ள ஆசையா ?, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment