Sunday, April 14, 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024 : இந்தியா & தமிழ்நாடு (அரசியல் அறிவோம்)

 வாசகர்களுக்கு வணக்கம் 

தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந்நேரத்தில் மீண்டும் உங்களை இப்பதிவின் வாயிலாக சந்திப்பதில் உள்ளபடியே மகிழ்கிறேன். சமீப காலமாக இத்தளத்தில் எந்த விதமான பதிவும் இடாமல் இருந்தாலும் கூட என்னுள் இருக்கும் அரசியல் அணு என்னை விடுவதாக இல்லை. அதனால் சம கால தேர்தல் அரசியலை என்னறிவிற்கு உட்பட்டு விளக்குவதற்காகவும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அடிப்படை அரசியலை அறிந்து கொள்வதற்கான ஒரு விழிப்புணர்வு பதிவாக இது இருக்கும் என்பதாலும் இப்பதிவு. அரசியல் தேர்தலில் மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பின்னிப்பிணைந்துள்ளது. உங்களது குடும்பத்திலும், நீங்கள் வசிக்கும் இடத்திலும், நீங்கள் வேலை செய்யும் இடங்களிலும் ஒவ்வொரு நகர்வையும், நிகழ்வையும் தீர்மானிப்பது அரசியலே. ஆக அதை அறிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணத்துடன் இப்பதிவை நீங்கள் படிக்கும் பட்சத்தில் நான் சொல்ல கூடிய கருத்துக்களை சிரமமின்றி உள்வாங்கிக்கொள்வதோடு உங்களது வாழ்க்கையுடனும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும்.  

கீழ்க்கண்ட சிலப்பதிகார வரியுடன் தொடங்க ஆசைப்படுகிறேன் . 

விளக்கம் கேட்கின்றீர்களா? இதற்கான உள்ளார்ந்த பொருளை இப்பதிவினை படித்தவுடன் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நிச்சயம் நான் நம்புகிறேன். 

அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என பட்டும்படாமல் பேசினாலும், அரசியல் ஒரு சாக்கடை தள்ளி இருப்பதே நல்லது என வெறுப்பாக பேசினாலும், நானாச்சு என் வேலையாச்சு என் வாழ்கையாச்சு என சுயசார்பாக பேசினாலும், அரசியலில் ஆர்வம் இருந்தாலும் இல்லையென்றாலும் கூட நாம் அனைவருமே அரசியல் வலைகளில் உள்ள ஆயிரமாயிரம் அரசியல் முடிச்சுகளுக்கு இடையே கட்டுண்டு உள்ளவர்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு கட்சியிலோ ஆட்சியிலோ பங்கு பெரும் ஒரு சராசரி அரசியல்வாதியாக ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்று கண்டிப்பாக நான் சொல்லப்போவது இல்லை. வெறுமனே ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பதும், அரசியல் புரிதல் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதும், தலைவரின் பண்பு, செயல்பாடு எப்படி இருந்தாலும் அவரின் அல்லக்கையாக இருப்பதும், கட்சியின் கொள்கை புரிகிறதோ இல்லையோ உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ முரண்பாடாய் தெரிகிறதோ இல்லையோ அவைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அல்லது கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் தான் பெரும்பாலான அரசியல்வாதிகளின் பழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் நாம் அந்த மாதிரியான அரசியல் அமைப்புக்குள் சென்று அரசியல்வாதியாக இருக்க வேண்டும் / மாற வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. ஆனால் அந்த அரசியல் அமைப்பின் அர்த்தம் புரியாமல் அரசியலில் பெரும் வெற்றி பெறுவதாலையே நான் பெரும் அரசியல்வாதி, சாணக்கியன் என நினைக்கும் அரசியல்வாதிகளிடத்தில் மன மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒவ்வொரு குடிமகனும் அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதியாகத்தான் மாற வேண்டும் என்பதல்ல. (அரசியலுக்கு வர விருப்பம் உள்ள பட்சத்தில் ஒரு அரசியல்வாதியாக மாறி ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை நீங்கள் முன்னெடுக்கலாம். அது வேறு கதை). ஆனால் அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும், ஒவ்வொருவரும் அரசியல் ஆர்வலராக, அரசியலை அறிந்து கொள்பவராக, அரசியலை ஆராய்பவராக, அரசியல் விமர்சகராக மாற வேண்டும். இதுவே நாட்டினுடைய குடிமகனாக ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தன்மைகளாக  நான் பார்க்கிறேன். ஒவ்வொரு குடிமகனும் இத்தகைய தன்மைகளுடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் செலுத்தக்கூடிய ஒவ்வொரு வாக்கும் உண்மையாலுமே ஒரு விரல் புரட்சிக்கு இட்டுச்செல்லும். அதுவே, அரசியல் சாக்கடையில் ஊறிப்போனவர்களை சிந்திக்க வைக்கவும் மாற்றத்தை முன்னெடுக்கும்இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டுவரவும் பயன்படும் என்றால் அது மிகையல்ல. முடிவாக, நடைமுறையில் பார்க்கும்போது ஒரு மனிதன் தனது பெற்றோர் மற்றும் சுற்றம் இல்லாமல் வாழ்ந்து விட முடியும் ஆனால் ஒரு மொழி இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா ? அது போலத்தான் அரசியலற்று நம் வாழ்வும் சாத்தியமில்லை. அதற்கு முதலில் அரசியல் என்றால் என்ன என தெரிந்து கொள்ள வேண்டும். பார்க்கலாமா ?

அரசியலை பற்றி அறிந்து கொள்வதற்கு கீழே கொடுக்க பட்டுள்ள உதாரணத்தை(கற்பனையானதுதான்) கவனியுங்கள். 

ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண் அவரது மனைவி என இரண்டு பேர் வீதம் மொத்தம் 100 குடும்பங்கள் உள்ளன. இதில் 70 குடும்பங்கள் ஒரு சமூகத்தையும் (சமூகம் 1), 30 குடும்பங்கள் மற்றொரு சமூகத்தையும் (சமூகம் 2) சார்ந்தவர்களாக உள்ளனர். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்களே குடும்பத்தலைவர். அவர்கள் சொல்வதை அவர்கள் மனைவி  கேட்பதே பழக்கத்தில் உள்ளது. பெரும்பாலான ஆண்களுக்கு அவர்களினுடைய  சமூகத்தின் மேல் தீவிர பற்றுதல் உண்டு அதற்கே முன்னரிமையும் அளிப்பர். இவ்விரு சமூகத்திற்கும் சமூகம் சார்ந்து தனியே கோரிக்கை ஒன்று உண்டு. இது தவிர ஒரு தரமான சாலை வசதி என்பது அக்கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கான கோரிக்கை. 

இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்களாக மொத்தம் 4 பேர் களத்தில் இறங்கினர். 

வேட்பாளர் 1 - சமூகம்-1 இல் இருந்து அவரது சமூகம் சார்ந்த கோரிக்கையை முதலில் நிறைவேற்றுவேன் என்ற உத்திரவாதத்துடன். 

.வேட்பாளர் 2 - சமூகம்-1 இல் இருந்து தரமான சாலைக்கே முதலில் முன்னுரிமை என்ற உத்திரவாதத்துடன்.
 
வேட்பாளர் 3 - சமூகம்-2 இல் இருந்து அவரது சமூகம் சார்ந்த கோரிக்கையை முதலில் நிறைவேற்றுவேன் என்ற உத்திரவாதத்துடன்.
 
வேட்பாளர் 4 - சமூகம்-2 இல் இருந்து தரமான சாலைக்கே முதலில் முன்னுரிமை என்ற உத்திரவாதத்துடன்.

இவ்வாறு இருக்க தேர்தல் நடந்தது. முடிவு அறிவிக்கப்பட்டது. யார் வெற்றி பெற்று இருப்பார்கள் ? 


உங்கள் பதிலை தேர்ந்தெடுத்துவிட்டு படிக்க தொடரவும். 

ஆம். நீங்கள் கணித்தது போலவே எந்தவித சந்தேகமும் இன்றி வேட்பாளர்-1 மிக எளிதாக வெற்றி பெற்று இருப்பார்.

ஆனால் இக்கிராமத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு மூன்றாம் மனிதனாக நாம் இச்சூழ்நிலையை கவனித்தால் யார் நியாயமாக வெற்றி பெற்று இருந்திருக்க வேண்டும். 


இதையும் முடிவு செய்துவிட்டு படிக்க தொடரவும்.

ஆம். நீங்கள் நினைத்ததே. வேட்பாளர்-2 அல்லது வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருந்திருக்க வேண்டும் அல்லவா. காரணம் அவர்களே அனைவருக்குமானவர்களாக இருக்கிறார்கள். நமக்கும் சரி என்று தோன்றுகிறது.

இதிலிருந்து நாம் அறிய வருவது, எந்த வேட்பாளர் தேர்ந்தெடுக்க பட்டாலும் (அவர் நல்லவரோ இல்லை  கெட்டவரோ) அதற்கு காரணம் பெரும்பான்மையான  பொதுமக்கள் எடுக்கும் முடிவுகளே.

எனவே நான் அரசியலை இவ்வாறு வரையறுக்கிறேன். 


நடைமுறை அரசியலும் நாம் விரும்பும் அரசியலும் 

மேலே சொன்ன உதாரணத்தில் யார் நல்ல வேட்பாளர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மிக எளிதாக சொல்ல முடிகிறது. ஆனால் நடைமுறையில் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. 

ஒரு வேட்பாளர் கெட்டவர் அல்லது நமக்கு எந்த நன்மையும் செய்ய மாட்டார் என்று தெரிந்து எந்த ஒரு குடிமகனும் அவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. இன்றைய கால நடைமுறை அரசியலில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மக்களை ஆட்டுவிக்கும் ஒரே நோக்கத்தில் பல்வேறு விதமான காரணிகளையும் சூழ்நிலைகளையும் தங்களுடைய ஆயுதங்களாக்கி செயல்படுத்திக்கொண்டுள்ளனர். மக்கள் யோசித்தால்தானே பிரச்சினை எனக்கருதி அதற்கு சற்றும் இடம் தராமல் மக்களுடைய சாதிய, மத, இன, மொழி, மாநில, தேசிய உணர்வுகளை தூண்டியும் ஒவ்வொரு சராசரி குடிமகனுக்கும் உரித்தான பயம், கோபம், நம்பிக்கை, வெறுப்பு, இரக்கம், கருணை, அனுதாபம், ஆசை முதலான மனித குணங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும் முக்கியமாக இந்திய போன்ற வளரும் நாடுகளில் பெரும்பிரச்சனையாக உள்ள வறுமையை வசதியாக பயன்படுத்தியுமே அரசியல் செய்கின்றனர் இக்கால அரசியல்வாதிகள். இவைகளில் இருந்து தப்பி பிழைத்து சுயமாக சிந்திக்க ஒரு சராசரி அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்களால் முடியுமா என்ன ? 

படித்தவர்கள் கூட யோசிப்பதில்லையா என்கின்றீர்களா? படித்தவர்களும் இத்தகைய குழப்பமான விளம்பர, சினிமா பாணி மற்றும் வலைதள அரசியலில் மாட்டிக்கொண்டுள்ளனர் என்றால் அது நூறு சதவிகித உண்மை. வீட்டுக்குள்ளேயே முழு நேரமும் முடங்கி இருக்கும் இளைஞர்களுக்கு வலைதளத்தில் வருவதே செய்தி. அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பிவிடவும் பழக்கப்பட்டு விட்டனர். கற்பனை வார்த்தைகளுக்கும் மதி மயங்க பழகி விட்டனர். இந்த அரிய வாய்ப்பை விடுவார்களா அரசியல் கட்சிகள்?. எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியும் "தகவல் தொழில்நுட்ப பிரிவு" அமைத்து முழு நேரமும் சமூக வலைதளங்களில் மிக தீவிரமாக செயல்படுகின்றனர். அதிலும் முக்கியமாக தேர்தல் நேரங்களில் கட்சிகளினுடைய பிரச்சாரத்தை திட்டமிடவும் வெற்றி வியூகங்களை வகுத்து கொடுக்கவும் அதில் கைதேர்ந்த பல நிறுவனங்களுக்கு கட்சிகள் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே. 

வசதி படைத்த வர்க்கத்தினரை பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை என நினைக்கின்றீர்களா? ஏனென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியலில் ஈடுபடுபவர்களும், ஏதாவது ஒரு வகையில் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசியல் ஆளுமை மிக்கவர்களும், அரசியலால் பலன் அடைவர்களும் பெரும்பாலும் வசதி படைத்தவர்களாகவே இருக்கின்றனர். வசதி படைத்தவர்கள் வாக்காளர்களாக இருப்பதை விடவும் வாக்கினை பெறுபவர்களாக இருக்கின்றனர். அப்படி இருப்பதையே பெருமையாகவும் வசதியாகவும் கருதுகிறார்கள் போலும். எனவேதான் வாக்காளர் கணக்கில் அவர்களை என்னால் வைக்க முடியவில்லை. 

கொள்கைக்காக, உரிமைக்காக, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக போராட்ட குணத்ததுடன் இருந்த கட்சிகள்தான் ஆரம்பத்தில் கள அரசியலில் இருந்தன. அப்படிப்பட்ட அரசியல் அமைப்பில்  பொது நலம் விலகி காலப்போக்கில் சுயநலம் உள்ளே வர வர அடிப்படை அரசியல் அமைப்பே அடியோடு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்ட அரசியலை  மிகவும் சாதாரணமாக கடந்த 50 வருடங்களாக மக்கள் பார்க்க தொடங்கியதும் கடந்து போகவும்  தொடங்கியதன் விளைவுதான் இந்த மக்களிடத்தில் எப்பேர்பட்ட சித்து விளையாட்டையும் அரங்கேற்றி ஏமாற்ற முடியும்  என அரசியல்வாதிகள் சிந்திக்கவும் அதனை காலத்திற்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சியுடன் திறம்பட செயல்படுத்தவும் வைத்தது. அபாயகரமான விளிம்பில் இன்னும் தொடர்ந்தும் கொண்டிருக்கிறது. அதாவது நல்லது செய்ய/நல்லது செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நிலை மாறி ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டும் (அல்லது) என்ன செய்தாலும் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற நிலைக்கு கட்சிகளும் ஆட்சியாளர்களும் மாறி பல தலைமுறைகள் ஆகிவிட்டன. அதனாலேயே "சிஸ்டம் சரி இல்லை", "அடிப்படை அரசியல் மாற்றம்" என அரசியல் வட்டாரத்தில் பலர் கூற நாம் அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறோம். 

ஆக, இத்தகைய மன ஓட்டத்தில்தான் அரசியலில் ஒவ்வொரு செயலும் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கேற்றார் போல் அரசியல் சூழ்நிலைகளும் கட்டமைக்கப்படுகிறது. இதன் விளைவாக, நான் முன்னரே கூறியது போல் ஒவ்வொருவரை சுற்றிலும் பல அரசியல் முடிச்சுகள் தெரிந்தோ தெரியாமலோ கட்டப்படுகின்றன. இம்முடிச்சுகளினால் குழப்பம் அடையும் வேட்பாளர்களால் / தாம் கட்டப்பட்டிருக்கிறோம் என தெரியாமலேயே வாக்களிக்கும் வேட்பாளர்களால் தெளிவான முடிவை எடுக்க முடிவதில்லை. அதனால்தான் நல்லவர் தூய்மையானவர் என்று இன்றளவும் போற்றப்படக்கூடிய காமராஜர் உட்பட பலர் தேர்தலில் தோல்வியடையந்தனர். அப்படி ஒன்றும் நல்லவர் இல்லை என சொல்லப்பட்டவர்கள் பலர் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றனர். 

இம்முடிச்சுகளினால் குழப்பம் அடையாமல் ஒவ்வொருவரும் உள்ளபடியே சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது ? நான் மேற்கூறியது போல் அரசியலில்  இம்மியளவேனும் ஆர்வம் கொண்டு, அணுகி ஆராய்ந்து குறைந்தபட்சம் வீட்டிலும் சுற்றி இருப்பவர்களிடமாவது விமர்சனம் செய்ய / விவாதிக்க பழக வேண்டும். 

நான் மேற்கூறிய உதாரணத்தில், அந்த கிராமத்தில் நீங்கள் ஒருவர் என வைத்துக்கொண்டு சற்று பொறுப்புடன் யோசியுங்கள். அங்கு அனைவருக்குமானவராக இருக்கும் வேட்பாளர்-2 / வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனில் அங்கு என்ன நடந்திருக்க வேண்டும் என உங்களால் யூகிக்க முடிந்தால் அதுவே நல்அரசியல். 

யூகித்து விட்டீர்களா ? என்ன நடந்திருக்க வேண்டும் ? 

என் பார்வையில்/உங்கள் பார்வையில்  ,
ஒன்று, சமுதாயப்பற்று கொண்ட பெரும்பான்மை ஆண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை கடந்து மனிதர்களை கடந்துதான் சாதி, சமுதாயம் என நினைத்திருப்பார்கள் என்று சொன்னால் வேட்பாளர்-2 / வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருப்பார் .

இரண்டு, ஒவ்வொரு வீட்டு பெண்களும் சுயமாக முடிவு எடுத்து வீட்டை கடந்து ரோட்டுக்காக யோசித்திருப்பார்கள் என்று சொன்னால் வேட்பாளர்-2 / வேட்பாளர்-4 வெற்றி பெற்றிருப்பார். 

ஆக இந்த நல்ல அரசியலுக்கு உங்களது எண்ணமும் செயலும் ஏதேனும் ஒரு வகையில் துணை நிற்கின்றது என்றால் அதுவே அரசியலில் உங்களது அறம். அத்தகைய அறத்துடன் ஒவ்வொரு நொடியும் வாழ்வது நல்வாழ்க்கை மட்டுமல்ல அதையும் தாண்டி புனிதமானது. எனவே, வாக்களிப்பது மட்டும் அரசியல் அல்ல. ஆட்சி அதிகாரத்தில் பெயரளவில் இருப்பதும் அரசியலில் இருப்பது போல் ஆகாது. வாக்காளராக இருக்கும் பட்சத்தில் ஓட்டளிக்கும் முன் வேட்பாளர், கொள்கை மற்றும் திட்டங்களின் நிறை குறைகளை சீர் தூக்கி பார்த்து சிந்தித்து முடிவெடுத்தலும், ஆட்சியாளராக இருக்கும் பட்சத்தில் அரசியல் சாசனத்தின் படியம் அதிகார வரம்புக்கு உட்பட்டும் செயல்படுதலே ஒரு நல்ல அரசியலுக்கு இட்டுச் செல்லும். 

அரசியல் ஓர் சாக்கடை, சிஸ்டம் சரியில்லை என்று சொல்லும் பெரும்பாலானோர் மற்றும் இலவச அரசியல் அறிவுரை வழங்குபவர்கள் அரசியலை நான் மேற்கூறியவாறுதான் பார்க்கின்றார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. நாம் நம்மை மாற்றிக்கொள்ளாதவரை அரசியல் மாறப்போவதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அரசியலமைப்பை பற்றி திரும்ப திரும்ப குறை கூறியும் எந்த பயனுமில்லை. கடைக்கோடி குடிமகனிடத்தில் எப்பொழுது அரசியல் புரிதல் வருகிறதோ அந்நொடியே  நல்லரசியல் உதயமாகும்.

எனவே, நல்லதோர் அரசியலை நான் எப்படி வரையறுப்பேன் என்றால் 



அரசியலில் மாற்றம் சாத்தியமா ?

எந்தவொரு மாற்றமாக இருக்கட்டும் அது ஓரிரவில் நடந்து விடுவதல்ல. மக்கள் சிந்திப்பதற்கேற்ப கருத்து பரிமாற்றத்தின் வேகத்திற்கேற்ப கால ஓட்டத்தில் மாற்றத்திற்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது. தசாப்தங்கள் தேவைப்படுகின்றன. ஏன் பல நூற்றாண்டுகள் கூட தேவைப்படலாம். யாரோ ஒருவரிடத்தில் உதிக்கும் நல்ல சிந்தனைதான் பரவி பரவி ஒரு சமூக மாற்றமாக உருப்பெறுகிறது. அப்படித்தான் பல மூட பழக்க வழக்கங்களில் இருந்து இன்று நாம் வெளிவந்துள்ளோம். உதாரணத்திற்கு முன்பு பழக்கத்தில் இருந்த விதவைகள் வெள்ளை சேலை அணிய வேண்டும் மற்றும் பொட்டு வைக்க கூடாது போன்ற மூட பழக்கங்கள்  இப்பொழுது காணாமல் போய்விட்டது என்று சொன்னால் அதற்கு காரணம் யாரோ சிலரிடத்தில் உதித்த நற்சிந்தனை சமூகத்தில் அனைவரிடத்திலும் பரவலாக்கப்பட்டதுதான். எனவே நமக்கு நல்லது என்று பட்டால் அதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் சலிப்பு பாராமல். ஆண்டுகள் பல ஆனாலும் அக்கருத்து வலுப்பெறும் என்றாவது ஒருநாள். 

மேலே சொன்னவாறு அல்லாமல், மாற்றங்கள் வேகமாக நடக்க வழியில்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது. நம் அனைவருக்கும் தெரிந்த பழமொழி ஒன்று உண்டு. 


நாம் எவ்வளவு படித்தாலும் ஆயிரம் பேர் சொல்லக்கேட்டாலும் நம் அனுபவத்தின் வாயிலாகவும் சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்தும் கற்றுக்கொள்வதுதான் ஏராளம். "பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்" என்று சொன்னால்தான் சாலப்பொருத்தம். ஆக, மாற்றம் சட்டென நிகழ வேண்டுமெனில்/நம் புத்திக்கு சட்டென உரைக்க வேண்டுமெனில் பட்டால்தான் நடக்கும். இதை எளிதில் விளக்க மிகப்பெரிய உதாரணமாக அமைந்ததுதான் கொரோனா. எதைப்பற்றியும் சிந்திக்காமல் வேகமாக ஓடிக்கொண்டிருந்த மக்களை சட்டென நிறுத்தி ஓராண்டு காலம் வீட்டுக்குள் முடக்கி சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை, சமூக பிணைப்புகளின் பலத்தை, உள்ளூர் சந்தைகளின் அவசியத்தை, சொந்த தொழில் செய்வதின் சாதகத்தை, தொழில்நுட்ப முன்னேற்றத்தை, மன வலிமையின் வீரியத்தை உணரச்செய்தது என்று சொன்னால் அதுவே கொரோனா செய்த நன்மையாக உடனடி மாற்றத்திற்கான வித்தாகவும் நான் பார்க்கிறேன். 

நான் எதற்காக இதையெல்லாம் சொல்ல வேண்டியது உள்ளதெனில், மேற்கூறியது போல படித்தாலும் சரி பட்டாலும் சரி இந்த அரசியலில் மட்டும்தான் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவருவது இயலாத ஒன்றாகவே  இருக்கிறது. 

முதலில் இந்த அரசியலில் மாற்றம் எவ்வாறு பார்க்கப்படுகிறது. அப்படி பார்க்கப்படுவதால் மாற்றத்தின் முடிவு எவ்வாறு அமைகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மாற்றத்தினை பற்றிய தெளிவான புரிதல் இல்லையென்றாலும் கூட, ஏதாவது மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் தோராயமாக 30-40 சதவிகித்தனர் வரை இருக்கலாம். அவர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்றால்,

1. ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு பிரதான எதிரியாக இருக்கும் இன்னொரு கட்சிக்கு வாக்களிப்பதே மாற்றம் என நினைப்பதால்.
2. அச்சமயத்தில் பேசுபொருளாக உள்ள கட்சிக்கு வாக்களிப்பதே மாற்றம் என நினைப்பதால்.
3. எதிர்ப்பை காட்டுவதற்காகவோ இல்லை வேறு சில காரணங்களுக்காகவோ நோட்டாவிற்கு வாக்களிப்பதே மாற்றம் என நினைப்பதால். 

இது தவிர மாற்றத்தை பற்றி பெரிதாக கவலைப்படாமல் வாக்களிப்பவர்களையும் நம்மால் பின்வருமாறு வகைப்படுத்த முடிகிறது. 

1. கட்சிக்காக, சாதிக்காக, மதத்திற்காக காலம் காலமாக கண்ணை மூடி வாக்களிப்பவர்கள்.(ஓட்டுக்கு பணமே வாங்கினாலும் கூட)
2. கட்சி சார்ந்திருந்தாலும், உட்கட்சி பூசல் காரணமாக, கூட்டணி கட்சி(கள்) பிடிக்காததன் காரணமாக, தனிப்பட்ட விரோதம் காரணமாக தான் சார்ந்த கட்சி/கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வாக்களிப்பவர்கள்.
3.  வாங்கிய பணத்துக்கு நேர்மையாக இருந்துவிடுவோம் என வாக்களிப்பவர்கள்.
4. கவர்ச்சிகரமான அரசியல் பேச்சுக்கள், தேர்தல் அறிக்கைகள், உறுதிமொழிகள் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் கவரப்பட்டு வாக்களிப்பவர்கள் .
5. நண்பரோ, குடும்ப உறுப்பினரோ அல்லது யாரோ ஒருவரின் சொல்லிற்கு இணங்க அல்லது நிர்பந்தத்திற்கு உட்பட்டு வாக்களிப்பவர்கள். 
6. ஓட்டு போட வேண்டும் அவ்வளவுதான் எந்த கட்சியா இருந்தா என்ன யார் வேட்பாளரா இருந்தா என்ன என வாக்களிப்பவர்கள். 

இதுதவிர, அரசியலின் மேல் நம்பிக்கையற்று (அல்லது) வெட்டி வேலை, நேர விரயம்தானே இது என நினைத்து (அல்லது) விடுமுறை அன்றும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டுமா என பொறுப்பில்லாமால் வாக்களிக்க செல்லாமல் இருப்பவர்களும் ஏராளம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எப்பொழுதும் சிட்டாய் பறந்து திரிந்து கொண்டு தேர்தல் நாளன்று மட்டும் ஓய்வெடுக்கும் பெரும்பாலான நகரவாசிகள் இந்த ரகம்தான். 

இதையெல்லாம் தாண்டி மிக சொற்பளவே இருக்கும் கடைசி வகைதான் "அறத்தின் பால் வாக்களிப்பவர்கள்". இவர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள்.  நேர்மையானவர்கள். யாருடைய உந்துதலுக்கும் ஆட்படாதவர்கள். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். அனைத்து வகைகளிலும் அரசியலை அலசி ஆராய்ந்து சீர் தூக்கி பார்த்து சமூக அக்கறையுடன் அனைவருக்காகவும் சிந்தித்து வாக்களிப்பவர்கள். வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுப்பவர்கள். 

அரசியல் வலையில் அறம் படும்பாடு 

நல்ல மாற்றத்தின் தொடக்கம் மக்கள் சிந்திக்கும்பொழுதே தொடங்குகிறது. அப்படி அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பித்தலாட்ட அரசியல்வாதிகளின் நிலைமை என்னாவது? அதனால் படிப்படியாக அரசியல் அமைப்பையே தங்கள் வசதிக்கேற்ப மாற்றி மக்கள் மனங்களில் எளிதாக ஊடுருவி தாங்கள் நினைப்பதையே மக்கள் செய்யுமளவிற்கு மக்களை ஓட்டளிக்கும் வெறும் ஒரு உயிருள்ள கருவியாக மட்டுமே மாற்றி விட்டனர் என்றால் தயவு செய்து நம்புங்கள்.   

முன்னரே சொன்னதுபோல் நல்லது செய்வதற்கு ஆட்சி வேண்டும் என்பது போய் ஆட்சிக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என எப்பொழுது ஆட்சியாளர்கள் நினைக்க ஆரம்பித்தார்களோ அப்பொழுது சீர்கெட்டு தலைகுனிய தொடங்கிய அரசியல் அமைப்பால் இப்பொழுது வரை நிமிர முடியவில்லை. இப்படி தடம் புரண்ட அரசியலில் என்னவெல்லாம் நடக்கிறது என பார்ப்போம். 

திட்டமிட்ட கருத்துருவாக்கம் 

பேசி பேசி, பாடி பாடி வளர்ந்த கட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அப்பேற்பட்ட கட்சிகளால் அரை நூற்றாண்டை கடந்தும் முக்கால் நூற்றாண்டை கடந்தும் இன்னமும் களத்தில் வலுவாக நிற்க முடிகிறது என்று சொன்னால் அதற்கு ஒரே காரணம் அவர்கள் மக்களுடைய உணர்வில் நேரடியாக கலந்ததுதான்.   இது உள்ளபடியே நல்லதுதான் என்றாலும், நல்லதை போலவே கெட்ட கருத்துக்களும் வேகமாக பரவத்தான் செய்யும் என்ற கணக்கில்  நல்ல கருத்தோ கேட்ட கருத்தோ அதனை மக்களினுடைய உணர்வில் கலந்தால்தான் அரசியல் செய்ய முடியும் ஆட்சிக்கு வர முடியும் என்பதால் இதனை ஆயுதமாக எடுத்து பேசுவதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, சொல்வதை சாத்தியப்படுத்த முடியுமோ இல்லையோ, பேச்சில் நாகரிகம் உள்ளதோ இல்லையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடி பொய்களையும் புரட்டுகளையும் அள்ளிவிட்டும் (மற்றும்) போலியான, சாத்தியமில்லாத மற்றும் முரணான கருத்துகளால் குழப்பியும் (மற்றும்) ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகும் என்ற கணக்கில் ஏதோ ஒரு கருத்தை வலுவாக உருவாக்கம் செய்து அதை கொள்கைபிடிப்பு போதையாக, கவர்ச்சிகர போதையாக, உணர்வு போதையாக மக்களிடத்தில் செலுத்துகின்றனர். இதில் மூளைச்சலவையடையும் மக்களால் போதையிலிருந்து விடுபட முடியாமல்  மனக்கண்ணை மூடிக்கொண்டுதானே வாக்களிக்க முடியும். 

அவர்கள்தான் இவர்களா ?

உதாரணமாக தங்களை ஊழலுக்கு எதிரான கட்சியாக, மத சார்பற்ற கட்சியாக, சமூகநீதிக்கான கட்சியாக, தொழிலாளர்களுக்கான கட்சியாக,  சிறுபான்மையினருக்கான கட்சியாக, மாநில உரிமைக்கான கட்சியாக, தாய்மொழியை தூக்கிப்பிடிக்கும் கட்சியாக, ஆன்மீகத்தை போற்றும் கட்சியாக ஏழை அடித்தட்டு மக்களுக்கான கட்சியாக காட்டிக்கொள்ள முற்படும் பல கட்சிகள் உள்ளபடியே அதற்கு தங்களின் செயல் மூலமாக நியாயம் சேர்க்காமல் திரும்ப திரும்ப அதை சொல்லி சொல்லி உண்மைக்கு புறம்பாக ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தவே முயல்கின்றனர்.   அதனால்தான் இதனை "திட்டமிடப்பட்ட கருத்துருவாக்கம்" என்ற அளவில் மட்டும் என்னால் பார்க்க முடிகிறது. 

அட ஆமாங்க..  எதிர்க்கட்சியில்  இருந்தால் ஊழல்வாதி. தம் கட்சிக்கு வந்துவிட்டால் நிரபராதி என்றிருக்கும் கட்சி தங்களை ஊழலுக்கு எதிரானவர்கள் என்று சொன்னால்  நம்பமுடிகிறதா ?

ஒரு குறிப்பிட்ட மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல், மற்ற மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் கட்சி தங்களை  மத சார்பற்ற கட்சி என்று சொன்னால் என்ன செய்வது ? 

வெற்றிக்காக தொகுதியில் செல்வாக்குள்ள ஒரு சாதிக்கட்சியை கூட்டணிக்குள் வளைத்து போட்டு, சாதி சார்ந்தவரை வேட்பாளராகவும் நிறுத்திவிட்டு சாதிய தீண்டாமையை ஒழிக்கும் கட்சி நாங்கள்தான் என்றால் எப்படி ?

தலைவர் வெற்றி பெற, தலைவர் கைகாட்டியவர் வெற்றி பெற  கடும் உழைப்பை கொடுத்து வேலை செய்யும் ஏழை எளிய தொண்டர்கள் நிறைந்த கட்சியில் , தொண்டர்கள் மென்மேலும் ஏழையாக தலைவரின் சொத்து மட்டும் எகிறிக்கொண்டு போகிறது என்று சொன்னால், இவர்களா தொழிலாளர்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் இருக்க போகிறார்கள் ?

அரசு வேலைவாய்ப்பில் விவாதத்திற்குரிய இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசும் கட்சிகள், உள்ளபடியே கட்சி பதவிக்கும், உயர்பொறுப்பிற்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் இதே போல் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாமே. ஏன் கண்டுகொள்வதில்லை. இவர்கள்தான் சமூக நீதியை காப்பவர்கள் ஆயிற்றே.
 
ஓர் அமைச்சர் பதவிக்காக, சுய நலன்களுக்காக  பல்லாயிரக்கணக்கான மக்களை காவு கொடுக்க முடிகிறது, மாநில பகுதிகளை தாரை வார்க்க முடிகிறது, சொந்த கட்சியையே அடகு வைக்க முடிகிறது என்று சொன்னால் இதற்கு பெயர் சந்தர்ப்பவாதம். இச்சந்தர்ப்பவாத கட்சிகள்தான் மாநில சுயாட்சியை , மாநில உரிமைகளை காக்க போராடுபவர்களா?
 
சர்வதேச அளவிலான ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளை நடத்துவதும், தமிழ் படித்தால் முன்னுரிமை என சடங்குக்காக ஊருக்கு உபதேசித்துவிட்டு தமது பிள்ளைகளை வெளிநாட்டிலும் சர்வதேச தரத்திலான பள்ளிகளில் படிக்க வைப்பதும்,  தமிழ் படிக்க தெரியாத வேட்பாளர்களை களத்தில் இறக்குவதும், தமிழரே அல்லாத வேட்பாளர்களை களத்தில் இறக்குவதும் யார் என்று நினைக்கிறீர்கள்? தமிழர், தமிழர் பண்பாடு, தமிழ்நாடு, தமிழ் தேசியம், தமிழ் வாழ்க என்று கூறி முதன்மைப்படுத்தும் கட்சிகள்தான். இதனை எப்படி வரையறுக்க. கொள்கைமுரணா ? அரசியல்முரணா?  அடையாளமுரணா ? புரியவில்லைதான் எனக்கும். நான் கேட்க விரும்புவது, தமிழுக்காக இவ்வளவு பேசும் கட்சிகள் , காணுமிடமெங்கும் தென்படும் பெயர்பலகைகளில் குறைந்தபட்சம் தமிழும் இடம்பெற வேண்டுமென ஏன் சொல்லமுடிவதில்லை. அப்படி செய்தால் அதுவே ஒரு பெரிய புரட்சிதானே.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, இந்த அரசியலுக்குள் கடவுள்களையும் இழுத்துவிட்டனர் என்பதே மிகவும் வருந்தத்தக்க செய்தி. செய்வது ஒன்று சொல்வது ஒன்றாக இருக்கும் அவர்கள்தான் இவர்கள் என்பதை அவர்களின் கடவுளோ (அ) நாம் வணங்கும் கடவுளோ தான் வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும். கடவுளுடன் சேர்ந்து நாமும் தப்பித்து கொள்ள பிரார்த்திப்போம் .  

முன்னிறுத்தப்படும்  முகங்கள் 

வாக்குகளை கவருவதற்காக மேற்சொன்னவாறு எப்படி கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகிறதோ அதே போல் ஈர்ப்பு உள்ள முகங்களை முன்னிறுத்தி பெயர்களை அடையாளப்படுத்தி வாக்குகளை கவரும் காட்சிகளை அன்றிலிருந்து இன்றுவரை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தேர்தல் அரசியல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே சினிமாவுடன் தொடர்புடனே இருந்துள்ளது. திராவிட கட்சிகளின் கொள்கைகளை வசனத்தின் மூலம் கருணாநிதி அவர்கள் பரப்பினார் என்றால் அதனை வெகுஜன மக்களிடத்தில் காட்சி ஊடகத்தின் வாயிலாக கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றியது எம்.ஜி.ராமச்சந்திரனின் முகமே. இந்த முகம்தான் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெறுவதற்கு அடித்தளமிட்டது. இதை ஆரம்பத்திலேயே உணர்ந்த கருணாநிதி அவர்கள் தனது மகன்களான முத்து , ஸ்டாலின் அனைவரையும் திரையில் நடிக்க வைத்தார். இன்னொரு மகன் தமிழரசு தயாரிப்பாளர் ஆனார். அதன் தொடர்ச்சியாக தான் இன்று கருணாநிதி பேரன்கள்(உதயநிதி,அருள்நிதி, தயாநிதி), அக்கா மகன்கள்(கலாநிதி) உட்பட அனைவரும் நடிகராகவோ, தயாரிப்பாளர்களாகவோ சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.  இதே போலவே எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் சினிமா துறையில் வெற்றி பெற்றிருந்த ஜெயலலிதா அவர்கள் அரசியலிலும் வளர ஆரம்பத்தில் அடித்தளமாக இருந்தது அவரது முகம்தான். இதே போன்று அவர்களின் பெயரை அடையாளப்படுத்துவதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. பொதுவாகவே சினிமா நடிகரை பிரபலப்படுத்தும் விதமாக புனைபெயரை கொண்டு அழைக்கும் வழக்கம் அன்று முதல் இன்று வரை தேவையில்லாமல் தொடர்ந்து கொண்டே வருவது அரசியலுக்கும் பொருந்தும். உதாரணமாக பகுத்தறிவு பகலவன் பெரியார் , பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், முத்தமிழறிஞர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், தளபதி ஸ்டாலின், சின்னம்மா, மக்கள் செல்வர் உட்பட புனைபெயர்கள் ஏராளம்.   கடந்த இருபது  வருடங்களாக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் கூட தலைவர்களின் முகங்களும் பெயர்களும் இடம்பெறுவது வாடிக்கையாகி விட்டது. உதாரணமாக கலைஞர் வண்ணத்தொலைக்காட்சி திட்டம், அம்மா மடிக்கணினி, அம்மா உணவகம் உட்பட பல திட்டங்கள். இது தவிர தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்குவதும், தலைவர்களுக்கு ஆங்காங்கு சிலை வைப்பதும், தெருக்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் உட்பட பல இடங்களுக்கு தலைவர்கள் பெயரை வைப்பதும், தலைவர்களை புகழ்பாட சினிமா கலைஞர்களை கொண்டு விழா எடுப்பதும் அடங்கும். தற்கால அரசியலில் நீங்கள் காணக்கூடிய வாசகங்களான "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்", "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" எல்லாமே கட்சியின் ஒற்றை முகமாக தன்னை முன்னிறுத்தி பெயருக்கான வலிமையை கூட்டுவதே. இதில் சமகால அரசியலில் முன்னிடத்தில் இருப்பவர்தான் பிரதமர் மோடி. குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட 13 வருடங்கள் தொடர்ச்சியாக முதல் அமைச்சராக இருந்த மோடி பாஜகவின் முகமாக இருந்ததால் பிரதமர் போட்டிக்கு வந்தார். அவர் வந்த பிறகு தொடர்ச்சியாக இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்ததால் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிடத்தில் கூட மோடியின் முகம் பரிச்சயமானதுடன் பெயரும் பிரபலமானது. அப்படிப்பட்ட மோடியின் முகத்தையும் பெயரையும் வைத்து மட்டுமே பாஜக இத்தேர்தலை பெரும்பாலான மாநிலங்களில் முக்கியமாக தென்னிந்தியாவில் சந்திக்கிறது என்று சொன்னால் இது தற்செயலாக நடப்பது அல்ல. அரசியல் செய்வதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டு செய்யப்படும் செயல்களில் இதுவும் ஒன்று. கொள்கைகள் வலுவிழந்த பட்சத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் முகங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. அதாவது ஒருவரின் முகம் திரும்ப திரும்ப காட்டப்படுவதால் பெயர் திரும்ப திரும்ப உச்சரிக்கப்படுவதால் அவரை வலிமையான தலைவராக வல்லவராக மக்கள் பார்ப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் கணக்கா, ஒருவர் கோர்வையா வசீகரமா பேசிவிட்டால் போதும் அவர் எது பேசினாலும் உண்மைதான் நல்லது செய்வான் என்று நினைக்கக்கூடிய சமூக பழக்கத்தில் முகத்திற்கும், பேச்சுக்கும், உடல் மொழிக்கும் வலிமை இருக்கத்தானே செய்யும்.  இந்த அரசியல்தான் வாக்குகளை அறுவடை செய்வதற்கும் பயன்படுகிறது. ஒரு தனிநபரை முன்னிறுத்துவது போலவே, ஒருவருடைய  அடையாளங்கள் கட்டமைக்கப்படுவதும் , அரசியலாக்கப்படுவதும் சராசரி அரசியலின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. ஒரு உதாரணத்திற்கு, 2021 தேர்தலுக்கு முன்பாக அரசியல் ஆலோசகரின் ஆலோசனைப்படி ஸ்டாலின் அவர்களுக்கு செய்யப்பட்ட சிகை அலங்காரம் உள்ளபடியே ஒரு தலைவருக்குண்டான மதிப்பை கூட்டி வாக்குகளை பெறுவதில் ஒரு சிறிய பங்களித்தது என்றால் என்னால் இப்படித்தான் சொல்ல முடிகிறது அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறதோ இல்லையோ முகத்தின் அழகு வாக்குகளில் தெரியும் வரலாற்றில் அடையாளமாகும். ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா அவர்கள் ஜெயலலிதா அவர்களை போன்றே உடையணிந்து பவனி வந்தார் என்று சொன்னால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது கட்சியை தாண்டி கொள்கைகளை தாண்டி நலத்திட்டங்களை தாண்டி ஒரு தலைவரின் முகத்தை வைத்து, உடல்மொழியை வைத்து, மக்கள் மனங்களில் எப்படி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதை  வைத்து இங்கு செய்யப்படக்கூடிய அரசியல் வானளவிற்கு நீளும். ரத்தினசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது  அம்மா வழியில் நடக்கும் ஆட்சி, கலைஞர் கருணாநிதி மகன் ஸ்டாலின் பேசுகிறேன், வேண்டும் மோடி மீண்டும் மோடி போன்ற முழக்கங்களை நீங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள் என்றால் மீண்டும் ஒருமுறை தலைப்பினை பார்த்துவிடுங்கள்.    

குறிப்பு  : கடந்த கால வரலாறு நமக்கு சொல்வது ஒன்றுதான். தேர்தலில் வெற்றி பெற நல்லவராகவோ, திறமையாளராகவோ இருப்பதை விட வல்லவராக இருத்தலே முக்கியம். திறமையாளராக இருந்தால் இறந்த பிறகு ஒரு பத்ம விருது கிடைக்கலாம். நல்லவராக இருந்தால் இறந்த பிறகு நாலுபேர் நான்கு சொட்டு கண்ணீர் விடலாம். உயிருடன் இருக்கும்போது எதுவும் கிடைக்காது. இதுவே இன்றைய எதார்த்த அரசியல். 

தலைதூக்கும் வாரிசு அரசியல் & வலுவிழக்கும் கருத்து சுதந்திரம்

தனிநபர் சார்ந்து அவர்களை முன்னிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று கேட்டால், நான் மேற்சொன்னது போல் தன்னை முன்னிலைப்படுத்தி வலிமை பெற கூடிய தலைவர்கள் கட்சியில் யாரும் தனக்கு நிகராக வர கூடாது என்பதில் உறுதி காட்டுவதை பல நேரங்களில் கண்கூடாக கண்டிருக்கிறோம்.  தன் மகனுக்கு போட்டியாக வந்துவிடுவார் என்ற அச்சத்தின் அடிப்படையில் திமுகவின் போர்வாளாக பிரச்சார பீரங்கியாக வலம் வந்த வைகோ அவர்கள் கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு தனிக்கட்சி தொடங்கி வாரிசு அரசியலை கடுமையாக சாடிய வைகோ மீண்டும் திமுகவுடன் இணைந்து அரசியலிலே இல்லாமல் இருந்த தனது மகனை கட்சியின் தலைமை நிலைய செயலாளராக்கி இன்று கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதியிலும் தன் மகனை நிறுத்தியுள்ளார் என்றால் இதுதான் அரசியல்முரண். அதே போலத்தான் 1982இல் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார். பின் 1984இல் மாநிலங்களவை உறுப்பினராக பதிவியேற்று மத்திய தலைவர்கள் பலருடன் நட்பு பாராட்டியதால் ஜெயலலிதா அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற செல்வாக்கை எம்.ஜி.ஆர் அவர்களே விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இது போல் பல உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கட்சியில் ஒருவர் செல்வாக்கு பெற்றால் (அ ) தனக்கு நிகராக ஒருவர் கட்சியினரால் பார்க்கப்பட்டால் தனக்கு ஆபத்து என்ற நிலையில் தான் ஜனநாயகத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பல்வேறு வகைகளில் தங்களை கட்சியின் முகமாக்க முயற்சித்துக்கொண்டே இருக்கின்றனர் கட்சி தலைவர்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் கட்சியின் முக்கிய பொறுப்புகளும் ,  மாநில செயலாளர் பதவியும்  தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் விசுவாசிகளுக்கும் வழங்கப்படுகிறது. தலைவனை போல தொண்டன் என்ற அடிப்படையில், மாநில செயலாளர்களும் தங்களுக்கு வேண்டியவர்களை பல்வேறு பதவிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். இதன் விளைவாகத்தான் நேர்மையானவர்கள், நல்லவர்கள், ஜனநாயகவாதிகள்  கட்சிப் பதவிக்கு வரமுடியாமல் சொம்படிப்பவர்களும், செலவு செய்பவர்களும்தான்  கட்சிப்பதவிக்கும்,  வேட்பாளராகவும் வர முடிகிறது. இப்பேற்பட்டவர்களுக்கு உள்ளபடியே கட்சியில் பதவியில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு இல்லாததால் வெற்றி பெறுவதற்கு வரம்புக்கு மீறி செலவு செய்வதையும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் அரங்கேற்றுகின்றனர். இப்படி செலவு செய்பவர்கள் வெற்றி பெற்றவுடன் ஆட்சி முடிவதற்குள் அதிகபட்சம் எவ்வளவு ஈட்டமுடியுமோ அதற்கான வேலைகளிலேயே ஈடுபடுகின்றனர். அங்கிருந்து ஊற்றெடுக்க ஆரம்பித்ததுதான் ஊழல். திரும்பவும் தேர்தல் வரும்பொழுது போன முறை கொடுத்ததை விட சற்று அதிகம் கொடுக்கும்பொழுது மீண்டும் வெற்றி கிட்டுகிறது. திரும்பவும் ஊழல் அதிகரிக்கிறது. ஊழல் செய்வதற்கு ஏதுவாக கட்சிக்கு நிதியும் கட்சித்தலைமைக்கு கமிஷனும் கொடுக்கப்படுகிறது. இந்த நிதியும், கமிசனாக கிடைத்த கருப்புப்பணமும் தான் தேர்தல் மாநாட்டுக்கும், தேர்தல் செலவுகளுக்கும் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அரசியல்தான் தற்பொழுது அனைவராலும் சராசரி நிகழ்வாக பார்க்கப்படும் நடைமுறை அரசியலாக மாறியுள்ளது. இப்படி அரசியல் மாற்றப்பட்டதின் விளைவுதான் ஜன நாயகம் கேள்விக்குறியானதுக்கும், வாரிசு அரசியலுக்கும் வழிவகுத்துள்ளன. 

இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு தோன்றுவது போலவே எனக்கும் ஞாபகத்திற்கு வருவது உதயநிதி ஸ்டாலின்தான். எங்கள் குடும்பத்தில் இருந்து சத்தியமாக யாரும் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்று ஸ்டாலின் சொன்ன பிறகு இரண்டே வருடத்தில் அதாவது 2018-ஆம் வருடம் தனது 40ஆவது வயதில் அரசியலுக்குள் நுழைந்த உதயநிதி அவர்கள் 2019இல் இளைஞர் அணி செயலாளர், 2021 இல் சட்ட மன்ற உறுப்பினர், 2022இல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், 2023 இல் கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திலும், கட்சி தொண்டர்களின் சட்டை பைகளிலும், ஒட்டப்படும் சுவரொட்டிகளிலும் வீற்றிருக்கிறார் என்றால் இதே நிலை தொடர்ந்தால் 2026இல் முதலமைச்சரும் இவரே. ஸ்டாலினை விட அனுபவம் வாய்ந்த, அறிவிற் சிறந்த, 60 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கூட அரசியலில் 5 வருடமே அனுபவம் கொண்ட  உதயநிதிக்கு கீழ் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் ஜனநாயகம் என்ற வார்த்தை நாட்டுக்கு மட்டும்தானா கட்சிக்குள் இல்லையா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. அனைவருக்கும் எளிதாக புரிய வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணத்தை சொல்ல வேண்டியதாயிற்று. இதே போலத்தான் ஒவ்வொரு கட்சியும் தங்களது வசதிக்கேற்ப தங்களது சக்திக்கேற்ப ஜனநாயகத்தை வளையோ வளையென வளைக்கின்றனர். 

வளர்ச்சி அரசியலுக்கு மாறாக வாக்கு அரசியல் 

முன்பெல்லாம் சாலை போட்டு தந்துள்ளோம், குடிநீர் வசதி செய்து தந்துள்ளோம் என்றெல்லாம் சொல்லி ஒட்டு கேட்டதை நாம் பார்த்திருக்கிறோம். தாங்கள் செய்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என சொல்லி ஓட்டு கேட்டார்கள். அதில் நம்பிக்கையை பெற்றவர்கள் மக்களிடையே செல்வாக்கை பெற்று வெற்றியடைந்து வந்தனர் . பெரும்பாலும், சமூக பிரச்சினைகளை மையப்படுத்திய (எ) சமூக வளர்ச்சியை மையப்படுத்தியே இருந்தது முன்பிருந்த அரசியல். அது இப்பொழுது எப்படி தடம் புரண்டுவிட்டது என்றால் ஆட்சிக்கு வருவதற்கு வாக்குகளை பெறுவதற்கு அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மாறிவிட்டது.   இன்னும் சொல்ல போனால் ஆட்சிக்கு வருவதற்கு என்ன வேணாலும் செய்யலாம் என்ற மன நிலைக்கு அரசிய கட்சிகள் வந்துவிட்டன என்றால் மிகையல்ல. இதன் அடிப்படையிலேயே பல அரசியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தன் கட்சிக்கு இதுதான் கொள்கை என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள் அதற்கு நேரெதிரான கொள்கை கொண்ட கட்சியுடன் கூட்டணி வைக்கிறது என்று சொன்னால் அங்கு வெற்றி பெறுவதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர நல்லரசியல் நீர்த்து போகிறது. இது வெறும் வாக்கு அரசியலே. வெற்றியோ தோல்வியோ கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதல்லவோ நம்பிக்கைக்குரிய அரசியல். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை உயர்த்துவதற்கான திட்டங்களை, ஏழை எளியோருக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களை தந்த காலம் மறைந்து, வெகுஜன மக்களை வாக்குகளுக்காக ஈர்ப்பதற்கான திட்டங்கள் பல அறிவிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பெண்களை குறிவைத்து இலவச பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, கல்லூரி மாணவிகளுக்கான ஊக்கத்தொகை இது போன்ற திட்டங்கள் பெண் வாக்காளர்களை குறிவைத்தே நடைமுறை படுத்தப்படுகிறது. அதாவது போதுமான வேலைவாய்ப்பு, தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான சாலை வசதிகள், தரமான உட்கட்டமைப்பு வசதிகள், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காரணிகளை தடுத்தல், தொகுதி வாரியாக உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு, மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகள்,  சிக்கலின்றி தினசரி வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்தல் போன்றவற்றை ஒரு அரசு கவனத்தில் எடுத்து முக்கியத்துவம் அளித்து அதற்கான திட்டங்களில் முதலீடு செய்து வளர்ச்சி அரசியலுக்கு வழி  கோணாமல்  மக்களிடமிருந்து வரியை பெற்று திரும்பவும் மக்களின் தனிப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவது என்பது எப்படிப்பட்ட அரசியல் ?  மாதம் தோறும் அரசு நமக்கு பணம் தருகிறது என்ற எண்ணத்தை மக்களிடத்தில் உருவாக்கி தினசரி வருமானம் முக்கியம் என்றிருக்கும் ஏழை நடுத்தர குடும்பங்களின் வாக்குகளை பெறுவதற்கான வாக்கு அரசியல் தானே இது ? இலவச பேருந்துகளுக்கு பதிலாக பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, நியாயமான பேருந்து கட்டணத்தை வசூலித்து வளர்ச்சி அரசியல் செய்யலாம். வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தி அதன் மூலம் பெண்களை உள்ளே வரவைத்து பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுத்தால் அது அவர்களுக்கு சமுதாயத்தில் உரிமையை தாண்டி மரியாதையையும் கொடுக்கும். மாநிலமும் வளர்ச்சி அடையும் நாடும் வளர்ச்சி அடையும். இடைநிற்றலை தடுப்பதற்காக கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை என்பது எவ்வளவு வேடிக்கை. அதிலும் மாணவர்களுக்கு இல்லை என்பது என்ன கணக்கோ? இந்த செயல்களை எல்லாம் வாக்குகளுக்காக செய்யப்படும் அரசியலாக இல்லாமல் வேறு எப்படி பார்க்க முடியும் ? இதே போலத்தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் அது நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கிறதா என்று பார்க்காமல் அதனால் வாக்கு வங்கிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறதா என தெளிவுடன் பார்த்து கொள்கின்றனர். இதில் அரசியல்வாதிகளை மட்டும் தவறு சொல்லி பயனில்லை.  அதற்கு இடம் கொடுப்பதே பெரும்பாலான மக்கள்தானே. பரந்துபட்ட மன நிலையில் யோசிக்காமல் தான், தன் குடும்பம் என குறுகிய வட்டத்திற்குள் யோசிப்பதனாலேயே வளர்ச்சி என்பது என்ன என்பதும் புரிவதில்லை. வாக்குகளை பெற எப்படி அரசியல் செய்கின்றர்கள் என்பதும் புரிவதில்லை.

வாக்குக்கு பணமும் கட்சிக்கு நிதியும் ஆட்சிக்கு ஊழலும் 

தேர்தல் நேரத்தில் எப்படி தெரியாமல் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதோ, அதற்கு கிட்டத்தட்ட நிகரானதுதான் மேல சொன்னதை போல் திட்டங்கள் என்ற பெயரில் அதிகாரபூர்வமாக வெளிப்படையாக மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படக்கூடிய பணம். இதனை எல்லாம் மக்கள் சாதாரணமாக எடுத்து கொண்டதின் விளைவுதான் காலத்திற்கு ஏற்ப பல்வேறு முறைகளில் ஓட்டுக்கு பணம் அளிக்கும் கலாச்சாரம் பெருகி கொண்டே வருகிறது. ஒரு ஓட்டுக்கு 500இல் இருந்து ஆரம்பித்து 5000 வரை செலவிடப்படுகிறது வேட்பாளரின் செல்வாக்கை பொருத்தும் மக்களின் எதிர்பார்ப்பை பொருத்தும் நடைபெறக்கூடியது இடைதேர்தலா, சட்டமன்ற தேர்தலா, உள்ளாட்சி தேர்தலா அல்லது பாராளுமன்ற தேர்தலா என்பதை பொருத்தும் அமைகிறது. பணத்திற்கு பதில் பொருளாக கொடுப்பதும், டோக்கன் சிஸ்டம் முறையில் டோக்கனை கொடுத்தால் பொருளை வாங்கி கொள்ளலாம் என்பதும் அரசியலில் கைதேர்ந்தவர்கள் பாணியாக உள்ளது. மாநாடு நடந்தால் பிரியாணி, குவாட்டர் சேர்த்து 200இல் இருந்து 500 வரை கொடுக்கப்படுவதும் நாம் அறிந்ததே. அதுவும் இடைத்தேர்தல் வந்துவிட்டால் மக்களுக்கு கொண்டாட்டம்தான். பட்டி கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டதும் இடைத்தேர்தலில்தான். அதாவது வேறு எந்த கட்சி வேட்பாளரும் மக்களை நெருங்காதபடி அவர்களை ஆடுகளை அடைப்பது போல் பட்டிக்குள் அடைத்து வைத்து தினமும் அவர்களுக்கான பணத்தை கொடுத்து விடுவது. இந்த மாதிரியான செலவுகளை செய்வதற்கு கட்சிக்கு நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி எப்படி வருகிறது என்று சொன்னால் தேர்தலில் நின்று வெற்றி பெறுபவர்களும், மாநில செயலாளர்களும், பெரும்தொழில் செய்யக்கூடிய செல்வந்தர்களும் தங்களுடைய வளர்ச்சி எக்காரணத்தினாலும் தடைபட்டுவிட கூடாது என்ற நோக்கில் ஆட்சியினரின் அபிமானத்தை பெரும் வகையில் கட்சிக்கு நிதி அளிக்கின்றனர். தேர்தல் பத்திரம் வாயிலாக ஒவ்வொரு கட்சியும் பல்வேறு நிறுவனங்களிலிருந்து எவ்வளவு நிதி பெற்றிருக்கிறார்கள் என்பது சமீபத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருப்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். (அதிகமாக தேர்தல் நிதி வாங்கியதில் தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் திமுகவும் முதன்மையில் உள்ளனர்). இவ்வாறு கட்சிக்கு நிதி வர வேண்டுமெனில் கட்சிக்கு நிதி அளிப்பவர்களுக்கு சாதகமாக  ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். கட்சியில் இருப்பவர்கள் எப்படியாவது செலவு செய்ததை திரும்ப எடுக்க வேண்டும் என்ற நோக்கிலும், கட்சிக்கு நிதி கொடுத்தால்தான் நமக்கு சீட்டு கிடைக்கும் என்ற நோக்கிலும் ஊழலில் ஈடுபடுகின்றனர். இதனால் நிரந்தர ஆதாயம் அடையப்போவது ஆட்சியாளர்களும், கட்சிக்காரர்களும், பெரும் முதலாளிகளுமே. பாதிக்கப்பட போவதென்னமோ வாக்காளர்களாகிய நாம்தான். கடந்த பத்து பதினைந்து வருடங்களாக நீங்கள் உற்று நோக்கினால் எங்கு பார்த்தாலும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு துறை நடத்தும் சோதனைகளை நீங்கள் அறிய முடியும். இது வருடா வருடம் அதிகரித்து கொண்டு செல்வது எதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று சொன்னால் அதிகரித்து கொண்டு செல்லும் முறைகேடுகளையும் ஊழலையும்தான். ஆனால் எப்படியோ தப்பித்து கொள்கிறார்கள். விசாரணை நடக்கிறதே தவிர யாரும் தண்டிக்கப்பட்டதாக செய்தியில்லை என்பது உள்ளபடியே இந்த விசாரணை அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கவே செய்கிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த அமைப்புகள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் பட்சத்தில் பல ஊழல்வாதிகள் சிறைக்குள்ளே  செல்வார்கள் என்பதுதான் உண்மை. ஆக இதனை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். 


தெருக்கோடியும் பல கோடியும் 

ஊழல் தடுக்க முடியவில்லை என்று சொன்னால், ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதையும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதையும் யாரும் தடுக்க முடியாது. ஒரு பெரிய இடைவெளியை மக்களுக்கு இடையில் ஏற்படுத்தும் அபாயத்தையும் கொண்டதுதான் இந்த ஊழல். மேலே சொன்னது போல் தேர்தல் சமயத்தில் பணம் கொடுத்ததும் ஆசை வார்த்தை காட்டியும் மக்களை வாக்களிப்பதற்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு பெரும் நிறுவனங்களுடனும் தொழில் அதிபர்களுடனும் , செல்வந்தர்களுடனும் சுமூகமான உறவை கையாண்டு அவர்களுக்காகவே அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. ஏழைகளுக்கு ஆயிரங்களில் கடன்கள் கொடுப்பதை பெருமையாக சொல்லி அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள் சத்தமே இல்லாமல் முதலாளிகளுக்கு  கோடிகளில் கடனை தள்ளுபடி செய்வது எதன் அடிப்படையில்? ஆட்சியில் இருப்பவர்களும் செல்வந்தர்களும் பரஸ்பரம் பலனடையும் வகையில்தானே இருக்க முடியும். தாங்கள் ஈட்டும் கருப்பு பணத்தை பதுக்குவதற்கும், வெள்ளையாக மாற்றுவதற்கும் என்ன என்ன செய்கிறார்கள் என்பது நாம் கண்கூடாக அறிந்ததுதான். கருப்பு பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வதும், பினாமி மூலமாக நிர்வகிப்பதும், சினிமா நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் மூலமாக கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதும் அரசியல்வாதிகளின் அன்றாட வேலை. ஒன்றுமே இல்லாமல் அரசியலுக்கு வந்தவர்கள் இன்று ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆனதும் வேட்பாளர்களின் சொத்துமதிப்பு ஒவ்வொரு முறை தேர்தல் பிரமான பத்திரம்  தாக்கல் செய்யும்பொழுதும் 100%, 200% சதவிகிதம் அதற்கும் மேலாகவும் எப்படி அதிகரிக்கிறது என்பதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆண்டவனுக்கே  வெளிச்சம். இது ஒருபுறமிருக்க, பட்டினியில் விவசாயிகள் இறப்பதும் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதும், கூலிக்கு மீறிய வேலையும், பண வீக்கமும், விலைவாசி உயர்வும், பசிக்கொடுமையால் பிச்சையெடுப்பதும் மற்றொருபுறம் அதிகரித்துக்கொண்டுள்ளன. அதாவது மேல்தட்டு மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தால் அபாயத்திலேயே முடியும். இது தொடரும் பட்சத்தில் மக்களுக்கு இடையில் குழப்பங்களும் சண்டைகளும் அதிகரித்து அடக்குமுறையும், தீவிரவாதமும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. நீங்கள் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவராக செய்தித்தாள்களை தினமும் புரட்டுபவராக இருந்தால் உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.  எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு செய்திகளைத்தான் பார்க்க முடிகிறது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடக்கும் செயல்களை விட பெரும்பாலான கொலை கொள்ளைகளுக்கு சமூக பிரச்சனைகளே காரணமாக உள்ளது. ஒருவர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் சர்வ சாதாரணமாக திருட்டு, கொலை , கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.கூலிப்படையாகவும் மாற்றுகின்றனர்.  அதே போல் ஏதேனும் ஒரு வகையில் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்று நினைக்கும் மக்கள் படிப்படியாக தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். உட்சபட்சமாக தற்கொலைப்படையாகவும் மாறுகின்றனர். ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் இப்பேற்பட்ட குற்றச்செயல்கள் இந்திய போன்ற சிறிய பரப்பளவு கொண்ட நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப வரும்காலத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கலாம். ஒரு நல்ல அரசு என்றால் இதனை கவனிக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் ஒவ்வொன்றையும் அணுக வேண்டும். இல்லையென்றால் இது வருங்காலத்தில் உள்நாட்டு பிரச்சைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் உருவாவதற்கும் வழி  வகுக்கும். அப்படி நிகழும்போது சில நாடுகளில் உள்ளதை போல் சுதந்திரத்தை பறிகொடுத்து நாட்டுக்குள்ளேயே அடக்குமுறையை எதிர்கொள்ள நேரிடும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாடுகளுக்கிடையே போர் நடக்கும் சூழலும் வரலாம். 

ஊழலில் ஆரம்பிச்சு போருக்கு வந்திடுச்சா ?  என்னடா கதை கதையா விடுற என்று கேட்க தோன்றுகிறதா?.

ஆம். கருத்து சுதந்திரம் இல்லாதபொழுது, தனி மனித பொருளாதாரம் சிதைக்கப்படும்போது, உரிமைகள் பறிபோகும்பொழுது, இவையனைத்திற்கும் காரணமாக ஆட்சியில் உள்ள ஒரு கட்சியே இருக்கும்போது, அதை ஆட்சியாளர்கள் உணர தவரும்பொழுது இன்று நாளையோ உடனடியாக இல்லையென்றாலும் கூட அரை நூற்றாண்டுக்கு பிறகோ, ஒரு நூற்றாண்டுக்கு பிறகோ நாடுகளுக்கு இடையில் சமூகம் இல்லாமல் போகலாம். அதை பயன்படுத்திக்கொண்டு நாட்டை ஆக்கிரமிக்க  மற்ற நாடுகள் முனையலாம்.

பிரித்தாளும் அரசியல் & பழிவாங்கும் அரசியல் 

நாம் மட்டுமே ஆள வேண்டும், நம் குடும்பம் மட்டுமே தலைவர் பதவியில் இருக்க வேண்டும் என்று ஒரு கட்சி நினைத்தால் அது ஜனநாயகத்தின் அழிவிற்கு இட்டுச்செல்வதாகவே இருக்கும். எதிர் கட்சிக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுப்பதை விடுத்து கட்சியையே அழித்து விட வேண்டும் என்று நினைப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அப்படிப்பட்ட நிலைமையே நிலவுகிறது. எதிர்க்கட்சியில் உள்ளவர்களை தம் கட்சிக்கு இழுப்பதும், எதிர்க்கட்சிகளின் மேல் வழக்கு போடுவதும், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பில் தலையிடுவதும், எதிர்க்கட்சியில் பிளவை உருவாக்கி தமக்கு சாதகமாக்குவதும் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு அழகல்ல. அதே போல், பல்வேறு மதம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் உள்ளடக்கிய பன்முகத்தன்மைக்கு இலக்கணமாக உள்ள நாட்டில் தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரே மொழி, ஒரே தேர்தல் என திணிப்பது சரியானதும் அல்ல. ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான உறுப்பினர்களின் பலம் இருந்தாலும், அதை பொது தளத்தில் வைத்து அந்த சட்டத்தின் சாதக பாதகங்களை ஆரோக்கியமான முறையில் விவாதித்து முறைப்படி நிறைவேற்ற ஒரு கட்சி நினைக்குமானால் அவர்களை எத்தனை முறை வேணாலும் அரியணையில் ஏற்றலாம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் தாங்கள் நினைக்கும் எதனையும் செய்யலாம் என்று ஒரு கட்சி நினைப்பதும், அதற்கு எதிர்ப்பு வரும் பட்சத்தில் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதும், பழிவாங்கவும் செய்யலாம் என்பது ஜனநாயகத்தின் ஆணிவேரையே அறுத்துவிடும் செயல்.   

மாற்றம் எங்கிருந்து தொடங்க வேண்டும் 

மாற்றமோ / புரட்சியோ சமூகத்தில் ஏற்பட வேண்டும் என்று சொன்னால்  ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தனிமனிதரிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். பொதுவாக மிக மோசமான ஒரு நிலையை பரவலாக ஒரு சமூகம் சந்திக்கும்பொழுதே தனிமனிதரிடத்தில் மாற்றம் வருகிறது. அப்படி அல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ, அரசியலிலோ ஒரு முடிவு எடுக்கப்படும்பொழுது அதனை எளிதாக கடந்து செல்லாமல் சற்றே நம் அறிவை கொண்டு ஆராய்ந்து விவாதித்து அந்த முடிவை சுற்றியுள்ள அரசியலை விளங்கிக்கொண்டு நமது நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க வேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கும் கடத்த வேண்டும். நாம் நினைப்பதா நடக்க போகிறது என்றில்லாமல், யாராவது நியாயத்துக்கு குரல் கொடுப்பார்கள் என்று காத்திருக்காமல் நமக்கு சரி என்று படுவதை முழங்க வேண்டும். அப்படி நாம் சொல்லக்கூடிய கருத்து எவர் சார்பும் இல்லாமல் அனைவருக்குமானதாக அறத்துடன் இருத்தல் மிக அவசியம். 

காலத்திற்கு ஏற்ற அரசியல் எது ?

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான அரசியல் தேவைப்படுகிறது. மன்னர் ஆட்சியிலிருந்து மக்கள் ஆட்சியாக மாற ஜனநாயக அரசியல் தேவைப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் சுதந்திரம் பெற அடக்குமுறையை எதிர்க்க அகிம்சை அரசியலும் போராட்ட அரசியலும் தேவைப்பட்டது. காலம் காலமாக இருந்து வரும் மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க பகுத்தறிவு அரசியல் தேவைப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்ற சமத்துவ அரசியல் தேவைப்பட்டது. வீட்டுக்குள் முடங்கி இருந்த பெண்களை வெளியே கொண்டுவர பெண் முன்னேற்ற அரசியல் தேவைப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில்  நாம் காணக்கூடிய அரசியல் என்ன தெரியுமா ? நமக்கு தேவையே இல்லாத, நம்மை முன்னேற விடாமல் தடுத்துக்கொண்டிருக்க கூடிய, ஜனநாயகத்தை சிதைக்கக்கூடிய ஆதிக்க அரசியலும் ஊழல் அரசியலும், வாரிசு அரசியலும்தான். 

ஆக இதிலிருந்து நாட்டை மீட்பதோடு மட்டுமல்லாமல், நாமும் மீண்டு வர மக்களாகிய நாம் இன்றைய அளவில் கையில் எடுக்கவேண்டிய அரசியல் ஊழலுக்கு எதிரான அரசியல். 

இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் நாட்டிற்கு நலன் கிடைக்க வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் பின்பற்ற வேண்டிய அரசியல்தான் நான் மேற்சொன்ன பல்வேறு நன் அரசியல்களுக்கெல்லாம் தொடக்கமாக இருக்கக்கூடிய அறம் சார்ந்த அரசியல். அதாவது நாம் சார்ந்துள்ள அரசியலில் நேர்மை, தூய்மை, ஒழுக்கம், வாய்மையுடன் வாழ்ந்து அனைவருக்கானவராகவும் இருப்பதே அது. ஒருவேளை அரசியலில் அறம் இல்லை என்று சொன்னால் அநீதி மேலேங்கும். அதர்மம் எழுந்தாடும். நன்மக்கள் துன்பப்படுவர். இஃது அழிவையும் அக்கிரமத்தையும் விளைவிக்கும்.  

அப்படியென்றால் தற்கால அரசியலில் அறம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில் நாம் முதலில் அறத்துடன்தான் நடந்து கொள்கிறோமா என்ற இன்னொரு கேள்விதான். தனிமனிதனில் இருந்துதான் தொடங்குகிறது சமூக மாற்றமாகட்டும் அரசியல் மாற்றமாகட்டும். நம் அளவில் சரியாக இருப்பதே நாம் அரசியலில் காட்டும் அறம். 

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" வரிக்கான பொருள் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 


அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் செய்வது. அரசியலில் இருந்து தான் நீதி, நியாயம், தர்மம் என்ற அனைத்தும் உற்பத்தியாகின்றன என்ற பேருண்மையை உணர்ந்து, எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக எழுதப்பட்ட  "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற விடயத்தை ஒவ்வொரு அரசியல்வாதியும், குடிமகனும் தம்முள் ஆழப்பதிவு செய்தல் வேண்டும். முன்னரே சொன்னதுபோல் தேர்தலில் மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திலும், உங்கள் பணியிடங்களிலும், சுற்றுப்புறங்களிலும் பல்வேறு அரசியல்கள் இருக்கின்றன. அங்கு நீங்கள் காட்டும் அறம்தான் உங்கள் வாழ்வினுக்கு அழகு சேர்க்கும் உங்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் என்பதையும் தயவுகூர்ந்து மனதில் வைத்து செயலாற்றுங்கள்.   


மறக்காமல் வாக்களிப்போம் ! அறம் காப்போம் !


மறக்காமல் வாக்களிப்போம் ! அறம் காப்போம் !


உங்களது மேலான கருத்துகளை கீழே பதிவிடவும். நன்றி .

இந்தியாவில் நடந்த தமிழ்நாட்டில் நடந்த கடந்த கால தேர்தல்  அரசியல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை தெரிந்து கொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

2 comments:

  1. உங்களுடைய தளம் நீங்க என்ன வேண்டுமானலும் எழுதலாம்🙏

    ReplyDelete
  2. avar eluthiyathu patri ungaludaiya karuthukalai koorungal.

    ReplyDelete